திடீரென நிலை தடுமாறி விழுந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.. தாங்கிப் பிடித்த பாதுகாவலர்கள்!
பாட்னா: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இன்று ஆசிரியர் தினத்தையொட்டி பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இன்று பாட்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், பாட்னா பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கிரிஷ் குமார் சவுத்ரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த நிகழ்வில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் இருவரும் இணைந்து கல்வெட்டு ஒன்றைத் திறந்து வைக்கச் சென்றனர்.
அப்போது கல்வெட்டை திறக்கச் சென்ற நிதிஷ் குமார், திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதை உடனடியாக கவனித்த அவரது பாதுகாவலர்கள் உடனே சுதாரித்து அவரை தூக்கிவிட்டனர். இதில் நிதிஷ் குமாருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

பின்னர் சில நொடிகளிலேயே நிதிஷ் குமார் இயல்பு நிலைக்குத் திரும்பினார். திடீரென சமநிலை தவறி தடுமாறிய அவர், பாதுகாவலர்கள் தூக்கி விட்ட பிறகு சிரித்தார். பிறகு இயல்பாக நடந்து சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications