பீகாரில் நிதீஷ்குமார் அமைச்சரவையில் சேருவதா, வேண்டாமா? ராகுல் காந்தி ஆலோசனை
டெல்லி: பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசில் இடம் பெறுவது தொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
மொத்தம், 243 தொகுதிகள்கொண்ட, பீகார் சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில், ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான, கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், 27 இடங்களில் வெற்றி பெற்றது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரையே, மீண்டும் முதல்வராக்க, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, எம்.எல்.ஏ.,க்களின் கூட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆட்சியில் பங்கேற்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் காங்கிரஸ் உள்ளது.
கடந்த, 1989 வரை, பீகாரில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. லாலுபிரசாத் மற்றும் நிதிஷ் குமார் கட்சிகளால்தான் பீகாரில் காங்கிரசால் வளர முடியாமல் போனது.
இந்நிலையில், நிதிஷ்குமார் அமைச்சரவையில் இணைவதா என்பது குறித்து, பீகார் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சி.பி.ஜோஷி, மாநில தலைவர் அசோக் சவுதாரி ஆகியோருடன், டெல்லியில், அக்கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அமைச்சரவையில் இணைய அவர்கள் சம்மதம் கூறியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.