காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை கரம் பிடித்த காதலர்... கோபத்தில் ஆசிட் வீசிய காதலி!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட காதலர் மீது ஆசிட் வீசிய காதலியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த அப்ரீன் (19), ஹரித்துவாரில் பணியாற்றி வந்த அதே ஊரை சேர்ந்த சுராஜ் (22) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். கல்லூரியில் படிக்கும் போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
இந்நிலையில், அப்ரீனை திருமணம் செய்ய மறுத்த சுராஜ், சமீபத்தில் தனது வீட்டில் பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் சுராஜ் மீது கோபத்தில் இருந்துள்ளார் அப்ரீன்.
தனது காதலரைப் பழி வாங்கத் திட்டமிட்ட அப்ரீன், கடந்த ஞாயிறன்று தனது பிறந்தநாள் என வீட்டிற்கு சுராஜை வரவழைத்துள்ளார். அப்போது அவர் சுராஜ் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் முகம் மற்றும் உடல்பகுதிகளில் தீக்காயம் அடைந்த சுராஜ், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் 20 சதவீத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிட் வீச்சுத் தொடர்பாக சுராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் அப்ரீன் கைது செய்யப்பட்டுள்ளார்.