வீரப்பன் கூட்டாளி பிலவேந்திரனுக்கு 3 மாதம் பரோல் - மகன் திருமணத்திற்காக
பெங்களூரு: கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரப்பனின் கூட்டாளியான பிலவேந்திரன், தனது மகன் திருமணத்துக்காக பரோலில் வந்துள்ளார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி கர்நாடக எல்லையில் பாலாற்றின் குறுக்கே உள்ள சுரக்காய்மடுவு என்ற இடத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் உள்பட 22 பேர் பலியானார்கள்.
சந்தனகடத்தல் வீரப்பன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வீரப்பனின் கூட்டாளிகளான மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானபிரகாசம் ஆகிய 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 4 பேரும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளாக இவர்கள் கர்நாடக மாநிலம் பெலகாவி, மைசூர் சிறைகளில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில், பிலவேந்திரனின் மகன் ஜோசப் விக்டருக்கும், டெல்பின் லேபியா என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிலவேந்திரன் தனது மகன் திருமணத்துக்காக பரோலில் செல்ல அனுமதி கேட்டார்.
இதற்கு மைசூர் சிறை காவல் கண்காணிப்பாளர் திவ்யாஸ்ரீ அனுமதி வழங்கினார். இதையடுத்து பிலவேந்திரன் தனது சொந்த ஊரான மாரட்டபள்ளி கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள லூர்து அன்னை ஆலயத்தில் நேற்று நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
பிலவேந்திரன் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள் அவரை அடையாளம் கண்டு கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். சிலர் கதறி அழுதனர். பிலவேந்திரனும் உணர்ச்சி வசப்பட்டு அழுதார். மற்றவர்களும் கண் கலங்கினார்கள்.
தகவல் அறிந்து மாரட்ட பள்ளி கிராமமே அங்கு கூடியது. திருமண விழாவில் பிலவேந்திரன் பேசும்போது, ‘‘நான் ஜெயிலில் இருந்ததால் எனது மகன் 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இப்போது அவனது மனதை மாற்றி என்னால் முடிந்தவரை திருமணம் நடத்தி வைத்திருக்கிறேன். இப்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னை பரோலில் எடுக்க உதவிய அனைவருக்கும் நன்றி'' என்றார்.
3 மாதத்துக்கு இந்த பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதில் நல்ல பெயர் எடுத்தால் பிலவேந்திரனுக்கு நிரந்தர விடுதலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையே பாலாறு குண்டு வெடிப்பில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. எனவே ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பிலவேந்திரன் உள்பட 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று 4 பேரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.