குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் அப்துல் கலாமின் 'பில்லியன் பீட்ஸ்'
மைசூர்: மைசூர் பல்கலைக்கழகத்தில் துவங்கிய குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அறக்கட்டளை நடத்தி வரும் மின்னிதழான பில்லியன் பீட்ஸின் சிறப்பு பிரதி வெளியிடப்பட்டது.
மைசூர் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு துவக்க விழா நேற்று நடைபெற்றது. துவக்க விழாவில் பில்லியன் பீட்ஸ் மின்னிதழின் சிறப்பு பிரதி வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களின் வெற்றிக் கதைகளை கூறும் பில்லியன் பீட்ஸ் மின்னிதழை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நடத்தி வந்தார்.
அவர் மறைவுக்கு பிறகு கலாம் அறக்கட்டளை அதை நடத்தி வருகிறது. கலாம் மறைவுக்கு பிறகு நிறுத்தப்பட்டிருந்த பில்லியன் பீட்ஸ் மீண்டும் கடந்த ஆண்டில் குழந்தைகள் தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்டது.
பில்லியன் பீட்ஸ் சிறப்பிதழை ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான ஜான் பி. கோர்டான் மற்றும் மைசூர் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.எஸ். ரங்கப்பா ஆகியோர் வெளியிட்டனர்.
மைசூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். மாநாடு வரும் 7ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.
மாநாட்டை துவங்கி வைத்த மோடி, அப்துல் கலாம் பற்றி பெருமையாக பேசினார். கலாமை பொருத்த வரை அறிவியலின் முக்கிய நோக்கமே ஏழை, எளியவர்கள் மற்றும் இளைய சமூகத்தின் வாழ்க்கையை மாற்றுவது தான் என மோடி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.