மேற்கு வங்க ஆதிவாசிப் பெண் பலாத்கார விவகாரத்தில் திரினமூல் காங். பஞ். உறுப்பினருக்குத் தொடர்பு?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆதிவாசிப் பெண்ணை கிராமமே சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்து சீரழித்த சம்பவத்தில் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜீத் மண்டலின் பெயர் அடிபடத் தொடங்கியுள்ளது.
பிர்பம் மாவட்டம் சபல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது ஆதிவாசிப் பெண் ஒருவர், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு ஆணுடன் காதல் கொண்டதால் அந்தப் பெண்ணுக்கு ஊர்த் தலைவர் ரூ. 50,000 அபராதம் விதித்தார். அதை அந்தப் பெண்ணால் கட்ட முடியவில்லை. இதையடுத்து ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் அந்தப் பெண் ஊர் பார்க்க பலாத்காரம் செய்ய உத்தரவிட்டார் அந்த வெறி பிடித்த ஊர்த் தலைவர். பின்னர் அவரது தலைமையில் பல ஆண்கள் கூடி அந்தப் பெண்ணை விடிய விடிய பலாத்காரம் செய்தனர். இதை ஊர் மக்கள் பார்ப்பதற்காக மேடை போட்டு அந்த அநாகரீக, வெறிச்செயலை அரங்கேற்றினர்.
இந்த நிலையில், திரினமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து உறுப்பினர் அஜீத் மண்டலின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடுகிறது. அதாவது அந்தப் பெண்ணுடன் சேர்த்து ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட இளைஞரை விடுவிப்பதற்காக இந்த அஜீத் மண்டல், ஊர்க் குழுவினருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டாராம். இதுதொடர்பாக அவர் கையெழுத்திட்டுப் போட்டுக் கொடுத்த பத்திரத்தின் நகல் வெளியாகியுள்ளது.
இது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளு. இதுகுறித்து திரினமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் டாக்டர் சசி பாஞ்சா கருத்து தெரிவிக்கையில், எங்களது கட்சியினர் யாருக்கேனும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிந்தால் சும்மா விட மாட்டோம். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் இருந்த அனைவர் மீ்தும் கடும் நடவடிக்கை எடுக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே யாரும் தப்ப முடியாது என்றார்.
இதுகுறித்து அஜீத் மண்டல் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்பவில்லை. ஆனால் சம்பவம் நடந்தபோது அஜீத் மண்டலும் அந்த இடத்தில் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. சமூ்க சேவகர்கள் பலரும் இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவர் தவிர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications