”புதுமுகம் தேவை”- பா.ஜ.கவின் புதிய தேர்தல் அஸ்திரம்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் அதிகமான இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
2009ம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் பா.ஜ .க 433 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது.
புதுமுகங்களுக்கு இடம் கொடுக்காமல் பழைய எம்.பி.க்களுக்கு மீண்டும் சீட் கொடுத்ததால் தான் பா.ஜ.க. அதிக வெற்றியை பெற முடியவில்லை என்று அப்போழுதே விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 2 மாநிலங்களிலும் இளைஞர்களுக்கு பா.ஜ.க. அதிக முன்னுரிமை கொடுத்தது. அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் 62 பேர் புதுமுகங்கள், இளைஞர்கள். மத்திய பிரதேச மாநிலத்திலும் இதே தான் நடந்தது.
இதையடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் அதிகப்படியான இளைஞர்களை களம் இறக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். பா.ஜ.கவின் மொத்த வேட்பாளர்களில் 65 முதல் 85 சதவீதம் பேர் வரை இளைஞர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
வரும் 21ம் தேதி பா.ஜ.க. வேட்பாளர் தேர்வு தேர்வு தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.