"நல்லபடியாக" இணைந்த அதிமுக.. அங்கீகரித்த மோடி.. பாஜகவுக்கு பரம "திருப்தி"!
டெல்லி: அதிமுக இணைப்பை நல்லபடியாக முடித்த திருப்தி பாஜக வட்டாரத்தில் நிலவுவதை கண் கூடாக காண முடிகிறது.
பிரதமர் மோடி உடனடியாக இந்த இணைப்பை அங்கீகரிக்கும் வகையிலான ஒரு டிவீட்டைப் போட்டார். மறுபக்கம் டாக்டர் தமிழிசையோ, அம்மாவின் ஆசைப்படி அமாவாசையில் இணைந்துள்ளனர் என்று மறைமுகமாக மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். பிரதமர் மோடி வெளியிட்ட டிவீட்தான் இன்றைய அதிமுக இணைப்பின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளது.
மீண்டும் துளிர்த்த இலைகள்
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட அசாதாரண நிலைக்குப் பின்னர் அதிமுக முதலில் இரண்டாகப் பிளவுபட்டது. அடுத்து 3 பிரிவுகளாக பிளந்தது. இன்று இரு அணிகள் கைகோர்த்துள்ளன.
கருத்து வேறுபாடுகள் இன்றி
இபிஎஸ் தரப்பிலான அதிமுகவும், ஓபிஎஸ் பிரிவும் இணைந்து தினகரன் குருப்பை தனிமைப்படுத்தியுள்ளன. கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து பணியாற்றுவோம் என்று இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் கூறியுள்ளனர்.
இணைந்த கைகள்
தற்போது தமிழக சட்டசபையில் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் இணைந்து செயல்படவுள்ளனர். தினகரன் தரப்பு என்ன மாதிரியான குழப்பத்தை செய்யப் போகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
|
மோடியின் டிவீட்
இந்த நிலையில் இன்றைய முக்கிய ஹைலைட்டே ஓ.பி.எஸ்ஸை வாழ்த்தி பிரதமர் மோடி போட்ட டிவீட்தான். இது அதிமுகவின் இணைப்பை மோடி அங்கீகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு சந்தோஷம்தான்
நாடாளுமன்றத்தில் மொத்தமாக 50 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுகவின் இரு பிரிவுகளும் சமாதானமாகப் போயிருப்பது பாஜகவைப் பொறுத்தவரை சந்தோஷமான விஷயம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.