மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களுக்கு அழைப்பு
மும்பை: மும்பையில் நடைபெறவுள்ள நரேந்திர மோடி கூட்டத்திற்கு 10,000 டீக்கடைக்காரர்களை பாஜக அழைத்துள்ளதாம்.
டீ விற்றவரெல்லாம் பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்வதால் அதை முறியடிக்கும் வகையில் மோடி கூட்டத்திற்கு டீக்கடைக்காரரர்களை அழைக்கிறது பாஜக என்று சொல்கிறார்கள்.
டிசம்பர் 22ம் தேதி மும்பையில் மோடியின் பிரமாண்ட பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்தக் கூட்டத்தில்தான் டீக்கடைக்காரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மும்பை டீக்கடைக்காரர்களே வருக வருக
இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், மும்பையைச் சேர்ந்த 10,000 டீக்கடைக்காரர்களுக்கு மோடி கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளோம். விரைவில் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றார்.
டீ விற்றவர் என்றால் இளக்காரமா
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே, ஆரம்ப காலத்தில் அவர் டீக்கடையை நடத்தி வந்தார் என்பதைக் குத்திக் காட்டும் வகையில் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பேசி வருகின்றனர். இதற்குப் பதிலடியாகத்தான் இப்படி டீக்கடைக்காரர்களை கூப்பிடுகிறார்களாம்.
காங்கிரஸுக்கு நெத்தியடியாக இருக்கும்
இதுகுறித்து அந்த பாஜக தலைவர் கூறுகையில், டீக்கடைக்காரரர்களை நாங்கள் அழைப்பது காங்கிரஸுக்கு சரியான பதிலடியாக அமையும் என்றார்.
5000 பஸ்... 22 ரயில்கள்
இந்தக் கூட்டத்திற்காக 5000 தனியார் பேருந்துகளை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 20 முதல் 22 ரயில்களையும் புக் செய்யவுள்ளனராம்.
20,000 மாணவர்கள்
மேலும் இக்கூட்டத்தில் மும்பையைச் சேர்ந்த 20,000 மாணவர்களும் கலந்து கொள்ளவுள்ளனராம்.