எப்ப பார்த்தாலும் மமதாவை கடுமையாக திட்டுவதா.. சுவேந்து அதிகாரிக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்து வருவதற்கு அந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கொத்து கொத்தாக பல சீனியர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்களை பாஜக அள்ளி அரவணைத்துக் கொண்டது. எப்படியும் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தலில் தோற்கும்; பாஜக ஆட்சி அமைத்துவிடும் என நம்பி பெரும் கூட்டமே கட்சி தாவியது.
ஆனால் சட்டசபை தேர்தலில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்ற பாஜகவின் கனவு தகர்ந்து போனது. அத்துடன் தேர்தல் முடிந்த கையோடு பாஜகவுக்கு போன பல திரிணாமுல் தலைவர்கள் மீண்டும் சொந்த கட்சிக்கே திரும்பினர்.

நெருக்கடியில் பா.ஜ.க.
இதனால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் மட்டுமல்லாது திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் இருப்புக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எம்.எல்.ஏக்கள், பாஜகவை விட்டு ஓடிவிடலாம் என்கிற நிலைமைதான் உள்ளது.

சுவேந்து அதிகாரிக்கு எதிர்ப்பு
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை பாஜக மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சிப்பதற்கு அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான ராஜிப் பானர்ஜி கடுமையாக எதிர்த்துள்ளார். இத்தனைக்கும் ராஜிப் பானர்ஜியும் சுவேந்து அதிகாரியும் திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்கள்தான்.

மமதாவுக்கு மக்கள் ஆதரவு
இது தொடர்பாக ராஜிப் பானர்ஜி கூறுகையில், மமதா பானர்ஜிக்குதான் மக்கள் வாக்களித்துள்ளனர். 213 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தீர்ப்புக்கு நாமும் மதிப்பளிக்க வேண்டும். அதனால் மமதா பானர்ஜியை கடுமையாக விமர்சிக்கக் கூடாது என கூறியுள்ளார். ராஜிப் பானர்ஜியின் இந்த கருத்து பாஜகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸுக்கு ரிட்டர்ன்?
இந்த விமர்சனங்களால் ராஜிப் பானர்ஜியும் திரிணாமுல் காங்கிரஸுக்கு திரும்பப் போகிறாரா? என்கிற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. ஏனெனில் அண்மையில் திரிணாமுல் காங்கிரஸின் குணால் கோஷ், பார்த்தா சட்டர்ஜி ஆகியோரை ராஜிப் பானர்ஜி சந்தித்து பேசியிருந்தார். ஆனால் ராஜிப் பானர்ஜி ஒரு துரோகி; அவரை திரிணாம்முல் காங்கிரஸில் மீண்டும் சேர்க்கவே கூடாது என்கிற குரலும் எழுந்தது. இந்த பின்னணியில்தான் ராஜிப் பானர்ஜி பேச்சு மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications