உ.பி., பீகாரில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியே வெற்றி பெறும்: கருத்துக்கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று சிஎஸ்டிஎஸ் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று சின்என்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும், சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து கருத்துக்கணிப்பு நடத்தின. அதன் விவரம்,
என்.டி.ஏ.
கருத்துக்கணிப்பில் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் நடக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது.
உ.பி.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் பாஜக 41 முதல் 49 இடங்களை கைப்பற்றும். அதே சமயம் அம்மாநிலத்தை ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு 11 முதல் 17 சீட்களே கிடைக்கும்.
காங்கிரஸ்
உத்தர பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 8 முதல் 14 சீட்களும், காங்கிரஸுக்கு 5 முதல் 9 சீட்களும், பிற கட்சிகளுக்கு 1 முதல் 5 சீட்களும் கிடைக்கும்.
பீகார்
பீகாரில் இன்றைக்கு தேர்தல் நடத்தினால் பாஜக- ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி கூட்டணிக்கு 22 முதல் 30 சீட்கள் கிடைக்கும். மேலும் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 4 முதல் 8 சீட்கள் கிடைக்கும். கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம் 20 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லாலு
பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்கு 2 முதல் 6 சீட்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கும் அதே எண்ணிக்கையிலான இடங்களே கிடைக்கும்.
பிரதமர் வேட்பாளர்
பீகாரில் பாஜக வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமராக 48 சதவீதம் பேரும், நிதிஷ் குமார் பிரதமர் ஆக 32 சதவீதம் பேரும் பிகாரில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராகுல்
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என்று 10 சதவீத பீகார் மக்கள் மட்டுமே விரும்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.