லோக்சபா தேர்தல் நடந்தால் தே.ஜ. கூ.வுக்கு 349 இடங்கள் கிடைக்கும்: இந்தியா டுடே கருத்து கணிப்பு
லோக்சபா தேர்தல் தற்போது நடந்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 349 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
டெல்லி: லோக்சபா தேர்தல் தற்போது நடந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 349 இடங்கள் கிடைக்கும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே சில மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக லோக்சபா தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா டுடே வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 360 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 19 மாநிலங்களில் 97 லோக்சபா தொகுதிகளில் கடந்த ஜூலை 12-23 காலப் பகுதியில் மற்றொரு கருத்து கணிப்பை இந்தியா டுடே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே- எம்ஓடிஎன் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் விவரம்:
பாஜக அணிக்கு 349 இடங்கள்
தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களைக் கைப்பற்றும். கடந்த ஜனவரி கருத்து கணிப்பை ஒப்பிடுகையில் இது 11 இடங்கள் குறைவாகும். பாஜக தனித்து 298 இடங்களைக் கைப்பற்றும்.
காங்கிரஸ் அணிக்கு 79
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் 47 இடங்களைத் தாண்டாது என்கின்றன கருத்து கணிப்பு முடிவுகள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மொத்தம் 79 இடங்கள் கிடைக்கலாமாம்.
ராகுலுக்கு 25% பேர் ஆதரவு
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்கு ஆதரவாக 25% பேர் வாக்களித்துள்ளனர். ஆனால் கடந்த கருத்து கணிப்பை ஒப்பிடுகையில் இது 5% குறைவு.
மோடிக்கு 63% பேர் ஆதரவு
அதே நேரத்தில் சோனியா காந்தி குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரால் காங்கிரஸ் குடும்பத்தை வலுப்படுத்த முடியும் என 43% கூறியுள்ளனர். ஆனால் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக 63% பேர் தெரிவித்துள்ளனர்.