இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 10 லட்சம் தலித்துகளை டெல்லியில் திரட்ட போகிறதாம் பாஜக!!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி தற்போது 'இடஒதுக்கீடு ஆதரவு' நிலையை கையில் எடுத்துள்ளது. இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 10 லட்சம் தலித்துகள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை டெல்லியில் நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.
மத்தியில் ஆளும் அரசாக உருவெடுத்த பின்னர் தொடர்ந்து இடஒதுக்கீடு என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதை பாஜக தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் வலியுறுத்தி வருகிறது. குஜராத்தில் ஹர்திக் படேல் என்ற இளைஞரை தூண்டிவிட்டு இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீடு முறையையே ஒழித்துவிடு என்ற புதிய கோஷத்தை முன்வைத்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் அண்மையில், ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருந்தார்.
இதற்கு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் மிக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, முடிந்தால் மத்திய அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்து பார்க்கட்டுமே என்று சவால் விட்டிருந்தனர்.
இருப்பினும் பீகார் சட்டசபை தேர்தல் (அக்டோபர் 12 முதல் நவம்பர் 5வரை) நடைபெறும் நிலையில் இதுபோன்ற கருத்துகள் பகிரங்கமாக விவாதிக்கப்படுவதை விரும்பாத பா.ஜ.க., மோகன் பகவத் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இடஒதுக்கீட்டு முறையை மறு ஆய்வு செய்ய மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
பீகார் தேர்தலில் இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கும் பிற்படுத்தப்பட்டோர் பிரதிநிதிகளாக இருக்கும் நிதிஷ், லாலு ஆகியோர் ஓரணியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் உயர் ஜாதியினரும் தலித்துகளும் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் பாஸ்வான், மாஞ்சி ஆகியோர் இருப்பதால் ஒட்டுமொத்த தலித்துகள் வாக்குகளும் தங்களுக்குத்தான் என கருதுகிறது பா.ஜ.க.
இதற்கு வேட்டு வைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை ஒழிப்போம் என்ற கோஷம் அமைந்துவிடக் கூடாது என்பதில் பா.ஜ.க. முனைப்புடன் உள்ளது. இதனால் அந்த கட்சியின் தலித் முகமாக கருதப்படுகிற உதித் ராஜ் எம்.பி. மூலமாக தற்போது 'இடஒதுக்கீடு' ஆதரவு போராட்டம் நடத்த தயாராகிவிட்டது.
இடஒதுக்கீடு அவசியம்; தொடர வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து டெல்லியில் 10 லட்சம் பேரை திரட்டப் போவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இடஒதுக்கீடே வேண்டாம் என்கிற ஹர்திக் படேல் சில லட்சம் பேரை திரட்ட முடியும் என்றால் இடஒதுக்கீடு கோருகிற நாங்கள் 10 லட்சம் பேரை திரட்ட முடியும் எனவும் கூறியுள்ளார் உதித் ராஜ். டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் 7ம் தேதியன்று இந்த இடஒதுக்கீடு பேரணியை நடத்தப் போவதாகவும் கூறியுள்ளார் உதித் ராஜ்.
நடத்துங்க.. நடத்துங்க...












Click it and Unblock the Notifications