வளர்ச்சியா... சலுகையா?... 11 மணிக்கு பட்ஜெட்டில் ரிசல்ட்!
நிதியமைச்சர் அருண்ஜேட்லி இன்று தாக்கல் செய்யும் பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்குமா அல்லது சலுகைகளை அளிக்குமா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
டெல்லி : 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்குமா அல்லது சலுகைகளை அளிக்கும் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு 11 மணிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் நிதியமைச்சர் அருண்ஜேட்லி. பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் வாக்காளர்கள் சலுகைகளை எதிர்பார்க்கின்றனர், ஆனால் அரசின் நிலைப்பாடு வளர்ச்சியை நோக்கியே இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை, பாஜக அரசின் கடைசி 5வது பட்ஜெட். இந்த ஆண்டில் மாநிலங்கள் சந்திக்க உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் என்று மத்திய அரசின் பட்ஜெட் பெரும்பான்மையான மக்களைக் கவரும் வகையில் இருக்க வேண்டியுள்ளது. அதே சமயம் நிதிப்பாற்றாக்குறையை சரி செய்ய இலக்குகளை அடைய வேண்டிய கட்டாயமும் மத்திய அரசுக்கு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போது வெகுஜன மக்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்பது வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பது தான். கடந்த பட்ஜெட்டிலேயே வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படாத நிலையில் இந்த பட்ஜெட்டில் 5 லட்சம் வரை வருமான வரி விலக்கை எதிர்பார்க்கின்றனர் மக்கள். ஆனால் இதற்கு சாத்தியமில்லை அதிகபட்சம் ரூ. 3 லட்சமாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படலாம் என்று தெரிகிறது.
ஜிஎஸ்டியில் மாற்றம் இருக்குமா?
ஜிஎஸ்டிக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் சிறு தொழில்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் ஏற்கனவே அண்மையில் 40 பொருட்களின் விலை குறைந்துள்ளதால் புதிதாக எந்த வரி குறைப்பு அறிவிப்பும் இடம்பெறாது என்று தெரிகிறது.
100 நாள் வேலைதிட்டம் வழங்கப்படுமா?
விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதோடு, கிராமப்புறங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 100 நாள் வேலை திட்டத்தை தொடர்வது குறித்து அரசு அறிவிப்பை வெளியிடுமா என்றும் கிராமப்புற மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
உள்கட்டமைப்புக்கு கூடூதல் நிதி
அதே சமயம் ரயில்வே, சாலை மற்றும் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில் அந்த துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தவிர கல்வி, சுகாதாரம், மற்றும் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் அதிக நிதி ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
பட்ஜெட்டில் வளர்ச்சியா, சலுகையா?
பட்ஜெட் கவர்ச்சிகரமானதாக இருக்காது என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறார். இதனால் பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்காது என்று பரவலாக நம்பப்படுகிறது, எனினும் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானதாக இருக்குமா அல்லது சலுகைகளை அளிக்குமா என்பது 11 மணிக்குப் பிறகே தெரிய வரும்.