ஓட்டு கிடைக்காது பயம்? ஆந்திராவில் மோடி படத்தைப் போடாமலே பாஜக 'கூட்டணி' தேர்தல் அறிக்கை வெளியீடு!
அமராவதி: ஆந்திராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி படம் இடம் பெறாமல் அச்சிடப்பட்டிருப்பதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. வட இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாஜக எதிர்ப்பு அலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாஜக எதிர்ப்பு அலையை சமாளிக்க பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் அதிரடியான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆந்திரா, தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டார்கள்; எஸ்சி எஸ்டி ஓபிசி இட ஒதுக்கீட்டைப் பறித்துதான் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீட்டை கொடுத்துவிட்டது என மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரசாரம் செய்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான "இந்தியா" கூட்டணி தலைவர்களோ, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டையும் நிர்மூலமாக்கி இல்லாமல் செய்துவிடும் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பேச்சு ஆந்திரா, தெலுங்கானாவில் பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. ஆந்திராவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா இடம் பெற்றுள்ளன. தற்போது ஆந்திராவில் சட்டசபைக்கும் லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரு சேர தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டில் கை வைக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. பாஜகவின் அதீதமான முஸ்லிம்கள் எதிர்ப்பு பேச்சுகளை சந்திரபாபு நாயுடும் பவன் கல்யாணும் ரசிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த அதிருப்தியின் வெளிப்பாடாக, ஆந்திராவில் பாஜக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடியின் படத்தை அச்சிடவில்லை. சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரது படங்கள்தான் இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பில் இடம் பெற்றுள்ளன. இத்தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பாஜக மேலிடப் பார்வையாளர் சித்தார்த்நாத் சிங் பங்கேற்ற போதும் மோடி படம் அச்சிடாத தேர்தல் அறிக்கையை கையில் பிடித்து போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.
பாஜக- தெலுங்குதேசம் கட்சிகளிடையேயான இந்த கருத்து வேறுபாடை சுட்டிக்காட்டி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பிரசாரமும் செய்து வருகிறார். இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், தேர்தல் அறிக்கையில் சந்திரபாபு நாயுடு பொய்களை அடுக்கி இருக்கிறார். இதனால்தான் பாஜகவுக்கு கோபம் வந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications