ஜெர்மனியில் கருப்பு பணம்: 18 பேர் பட்டியலை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது மத்திய அரசு!
டெல்லி: ஜெர்மனியில் கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ள 18 பேரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
வெளிநாடுகளில் கருப்புப் பணத்தை பதுக்கிய இந்தியர்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருப்புப் பணம் பதுக்கியவர்களின் பட்டியலை 3 ஆண்டுகளாக தாக்கல் செய்யாததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் கருப்புப் பண பதுக்கல் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் சீல் வைக்கப்பட்ட கவர் ஒன்றை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்திருக்கிறார். இதில் ஜெர்மனியிலுள்ள லெடன்ஸ்டெயின் வங்கியில் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்கள் 18 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கருப்புப் பண பதுக்கல் குறித்த வருமான வரித்துறையின் விசாரணை முடிந்துவிட்டதாகவும் 18 பேரில் ஒருவர் உயிரிழந்துவிட்டதால் எஞ்சியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை தொடங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சீல் வைக்கப்பட்ட உறையிலுள்ள ஆவணங்கள் குறித்து நாளை மறுநாள் விவாதிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.












Click it and Unblock the Notifications