சாலையில் கண்டெடுத்த வெடிகுண்டு... புத்தகப் பையில் மறைத்து வைத்தபோது வெடித்து 8 வயது மாணவர் பலி !
ரூர்கீ: சாலையில் கண்டெடுக்கப் பட்டு, பாட புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீ ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்று கீழே கிடந்துள்ளது. அதனை அவ்வழியே சென்ற 8 வயது பள்ளி மாணவர் ஒருவர் கண்டுள்ளார். விபரீதத்தை உணராமல், அக்குண்டை எடுத்து தனது பாடப்புத்தக பையில் மறைத்து எடுத்துச் சென்றுள்ளார் அம்மாணவர்.
பள்ளி வளாகம் அருகே சென்ற போது திடீரென அக்குண்டு வெடித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அம்மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் கூறுகையில், "பள்ளி மாணவன் பலியானது மிகுந்த வருத்தத்தினை ஏற்படுத்துகிறது. இந்த குண்டு வெடிப்பு குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவு இடப் பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பள்ளி அருகே குப்பைத் தொட்டியில் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் மாணவர் பலியானதாகவும் வேறு ஒரு தகவல் கூறுகின்றது.