ஆருஷி கொலை வழக்கு சாயலில் உருவான ‘ரகஷ்யா’ படத்தை வெளியிட இடைக்கால தடை
மும்பை: நாடு முழுவதும் பரபரப்பை ஏர்படுத்திய ஆருஷி கொலை வழக்கின் சாயலின் உருவான ‘ரகஷ்யா' படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நொய்டாவில் வாழ்ந்து வந்த டாக்டர் தம்பதியான ராஜேஷ் தல்வார், நுபுர் தம்பதியினரின் ஒரே மகளான ஆருஷி மர்மமான முறையில் கொல்லப் பட்டாள். தங்களது ஒரே மகளை டாக்டர் தம்பதியினர் தான் கொலை செய்தனர் என்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது இந்த கொலை வழக்கு.
இந்நிலையில், அக்கொலை சம்பவத்தின் சாயலில் ரகஷியா என்ற பெயரில் படம் தயாரானது. இந்த படம் தங்களது பெயரை களங்கப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறி டாக்டர் தம்பதியர் மும்பை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
சென்சார் போர்டு பிரமாண பத்திரம்...
இந்த மனு மீதான விசாரணையின்போது சென்சார் போர்டு பிரமாண பத்திரம் ஒன்றை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் ஆருஷி கொலை வழக்குக்கும், படத்தின் காட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தது.
திரையிட்டுக் காட்ட உத்தரவு...
அப்போது படத்தை டாக்டர் தம்பதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்ட கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டது.
ஆருஷி கொலை வழக்கு பின்னணி...
அதனைத் தொடர்ந்து, சிறுமி ஆருஷி கொலை வழக்கு பின்னணியிலேயே ‘ரகஷ்யா' படத்தின் காட்சிகள் அமைந்து இருப்பதாக கைதிகளான சிறுமியின் பெற்றோர் தரப்பு வக்கீல் மும்பை ஐகோர்ட்டில் வாதம் செய்தார்.
நற்பெயருக்கு களங்கம்...
மேலும், இந்த படம் ஆருஷி கொலை வழக்கின் உண்மை பற்றி தெரியாமல், தண்டனை அனுபவித்து வரும் டாக்டர் தம்பதியரின் நற்பெயரை கெடுக்கும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது.
தண்டனையை எதிர்த்து அப்பீல்...
டாக்டர் தம்பதியர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அலகாபாத் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்து உள்ளனர். இதனால் அந்த அப்பீல் மனு மீது கோர்ட்டு முடிவு எடுக்கும் வரையில், ரகஷ்யா படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது' என வக்கீல் வாதம் செய்தார். அதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப் பட்டது.
இடைக்கால தடை...
இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
அடுத்தமாதம் தீர்ப்பு...
மேலும், படத்தை வெளியிடுவது தொடர்பாக அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி தீர்ப்பு வழங்குவதாகவும் அவர்கள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.