நேருவின் ‘பாரதரத்னா’வை திரும்பப் பெறுங்கள்... நேதாஜியின் பேரன் ஆவேசம்
டெல்லி : முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பாரத ரத்னா விருதை திரும்பப் பெற வேண்டும் என நேதாஜியின் உறவினர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வெள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

இந்த நிலையில், 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனாலும் இதை அவரது குடும்பத்தினரோ, ஆதரவாளர்களோ ஏற்கவில்லை.
விமான விபத்து சம்பவத்துக்கு பிறகு நேதாஜி ரஷியாவில் காணப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதனால் இன்று வரை நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை தொடர்ந்து வருகிறது. எனவே, மத்திய அரசால் நீண்ட காலமாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட கோரிக்கை வலுத்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 20 ஆண்டுகளாக நேதாஜியின் குடும்பத்தார் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்குச் சொந்தமான கருவூலங்களை நேரு திருடி விட்டதாகவும் சமீபத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது சமூக வலைதளைப் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நேதாஜி சந்திரபோஸ் விவகாரத்தில் நேருவின் உண்மையான ரூபம் தற்போது அம்பலமாகியுள்ளது. எனவே, நேருவுக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்பப் பெற வேண்டும்' என சுபாஷ் சந்திரபோஸின் கொள்ளுப் பேரன் சந்திர போஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ‘சுபாஷ் சந்திரபோஸின் சாதனைகளை அழிக்க நடந்த முயற்சி தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. நேருவைப் பற்றி தற்போது மக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர். அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதினை திரும்பப் பெற வேண்டும்' என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications