பிராமணர்களுக்கு மட்டுமே பிளாட்.. விளம்பரம் செய்து காசு பார்த்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ஹைதராபாத்: பிராமணர்களுக்காக மட்டுமே குடியிருப்புகளை விற்பனை செய்வதாக அறிவித்திருந்த தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் அதிபர், மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில், தலைநகர் ஹைதராபாத்தின் மெகபூப்நகர் அருகேயுள்ள செகுர் கிராமத்தில், 36 ஏக்கர் பரப்பளவில் பிளாட் அமைத்தார் ரியல் எஸ்டேட் அதிபர் பிரபாகர் ஷர்மா.

இ.எம்.ஐ
200 சதுர அடி கொண்ட பிளாட்டுகளை உருவாக்கி, ஒரு பிளாட்டை 6 முதல் 6.50 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்தார். 20 சதவீதத்தை டவுன் பேமென்ட்டாகவும், மிச்ச தொகையை இ.எம்.ஐ.களாகவும் வாங்கி வந்தார் பிரபாகர்.

பலருக்கும் ஒரே பிளாட்
இ.எம்.ஐ மூலமாக மாதம், சுமார் ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பிரபாகருக்கு வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், பேராசையால், ஒரே பிளாட்டை ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு ரிஜிஸ்டர் செய்து கொடுத்துவிட்டார் பிரபாகர்.

கைது
சமீபத்தில் இந்த விவகாரம் தெரிந்து வாடிக்கையாளரான ராமகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார். இதன்பிறகு பல வாடிக்கையாளர்களும் புகார் அளித்தனர். மோசடி புகாரின்பேரில் பிரபாகர் ஷர்மாவை கொத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரமணர்களுக்கு மட்டுமே
இந்த கைது நடவடிக்கை தெலுங்கானா, ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஒரு மீடியாவிடாமல் அனைத்திலும், தனது பிளாட் பற்றி விளம்பரம் கொடுத்ததால், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரபாகர் ஷர்மா. அதுமட்டுமில்லாமல், குறிப்பிட்ட அந்த பிளாட்டுகளை பிராமணர்களுக்காக மட்டுமே உருவாக்கியதாகவும் விளம்பரம் கொடுத்ததால் சர்ச்சையில் சிக்கியிருந்தார் பிரபாகர்.

நோ நான்-வெஜ்
குறிப்பிட்ட அந்த பிளாட், வேத காயத்திரி அக்ரஹாரம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த காலனி முழுக்கவே பிராமணர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாமிச சாப்பாட்டுக்கு அங்கு இடமில்லை. செல்ல பிராணிகள் மாமிசத்தை தூக்கி வந்துவிடும் என்பதால் அவற்றை வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்கள் ஏராளம்
கோசாலை எனப்படும் பசு இல்லங்கள் அங்கு திறக்கப்படும் என்றும், பிராமணர்களுக்கான ஐஏஎஸ் அகாடமி, வேத பாடசாலை, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என்றும் பிரபாகர் விளம்பரம் செய்திருந்தார். பிராமணர்கள் அக்ரஹாரத்தில் இருப்பதை போன்ற உணர்வு கிட்டும் என்று நினைத்து பிளாட்டுகளை வாங்க ஆர்வம் காட்டியிருந்தனர். குறிப்பாக வெளிநாடு வாழ் இந்திய பிராமணர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இங்கு பிளாட் வாங்க ஆர்வம் காட்டினர்.

அரசு ஊழியர்களுக்கும் தொடர்பா?
இந்நிலையில், ஒரே பிளாட்டை 2 வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததில் அரசு அதிகாரிகள் பங்கு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். சுமார் ரூ.25 கோடிவரை முறைகேடு நடந்துள்ளதாகவும் காவல்துறை கருதுகிறது.












Click it and Unblock the Notifications