லஞ்சம்: புதுவை அமைச்சர் ராஜினாமா கோரி அமளி- காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றம்!
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் லஞ்சம் வாங்கியதாக பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்; இதற்கு பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டசபையில் காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து புதுவை சட்டசபையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து குண்டு கட்டாக சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்து வருபவர் தீனதயாளன். இவர் காரைக்காலில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஹோட்டலில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இந்த சந்திப்பின் போது அரசு பணிக்கான ஒப்பந்ததாரர்களும் இருந்தனர்.

இந்த ஆலோசனை கூட்டம் நடந்த போது திடீரென சென்னையில் இருந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். அதேநேரத்தில் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தியது சிபிஐ.
மேலும் தீனதயாளன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் சுமார் 20 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து முதல் கட்டமாக தீனதயாளன் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனையடுத்து தலைமை பொறியாளர் தீனதயாளன், ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். தீனதயாளன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினராவார்.
இதனிடையே இந்த விவகாரத்தை இன்று புதுச்சேரி சட்டசபையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பினர். மேலும் புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் புதுவை சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதனடிப்படையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக தூக்கி சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் புதுவை சட்டசபை வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications