தலித் இளைஞரைத் திருமணம் செய்த தங்கையை கத்தியால் குத்திய அண்ணன்
தெலங்கானாவில் தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக அண்ணன் தனது சகோதரியை கத்தியால் குத்திய சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்: தெலங்கானாவில் தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதற்காக பெண்ணை அவருடைய சகோதரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பெஜங்கி மண்டல், வீர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிஎச் மௌனிகா, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இறுதி ஆண்டு படித்துவருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சொல்லு சாய் என்பவரைக் காதலித்து இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

சொல்லு சாய் தலித் என்பதால் மௌனிகாவின் பெற்றோர்கள் இவர்களுடைய திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடும்பத்தினரின் எதிர்ப்பைத் தாண்டி ஐதராபாத்தில் உள்ள ஆரியசமாஜத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
மௌனிகா திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொட்டபள்ளி கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மௌனிகாவின் தாய் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலுடன் மௌனிகாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர், மௌனிகா தன்னுடன் வீட்டுக்கு வர வேண்டும் இல்லாவிட்டால் இங்கேயே பூச்சிக்கொல்லி மருத்து குடித்து இறந்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். ஆனால், மௌனிகா தாயுடன் செல்ல மறுத்துவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து எப்படியோ மௌனிகாவை அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்ற அவருடைய வீட்டார்கள், மௌனிகாவை அடித்து தாக்கியுள்ளனர். இதை தாங்கிக்கொள்ள முடியாத மௌனிகா தன்னைக் காப்பாற்ற வருமாறு தனது கணவர் சொல்லு சாய்க்கு சனிக்கிழமை இரவு போன் செய்துள்ளார்.
மௌனிகா தனது கணவருடன் வாழ்வதில் பிடிவாதமாக இருக்கவே ஆத்திரமடைந்த அவருடைய அண்ணன் நாகராஜு தனது சகோதரியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். மௌனிகாவின் அலறல் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டுக்க்கார்கள் ஓடி வந்து பார்த்தபோது மௌனிகா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பின்னர் அவர்கள் மௌனிகாவை கரிம் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மௌனிகாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
இது குறித்து பெஜங்கி நகர் போலீஸார் நாகராஜு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து, சாதி மறுப்பு காதல் திருமணங்கள் நடக்கும் போது இது போன்ற தாக்குதல்களும் கொலைகளும் நடப்பது வாடிக்கையாகி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தெலங்கானா மாநிலம், பெடப்பள்ளி மாவட்டத்தில் கானாப்பூர் கிராமத்தில் மதுகார்(25) என்ற தலித் இளைஞர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கதல்பூர் கிராமத்தைச் சேர்ந்த இந்த இளைஞர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தார். இருவரும் திருமணம் செய்துகொள்வதற்காக மதுகார் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். 2 நாட்கள் கழித்து மதுகார் கானாப்பூருக்கு வெளியே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்பவத்தில் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதை எதிர்த்து தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications