உ.பி. சட்டசபை தேர்தல்: தலித் வாக்குகளை அள்ள மோடியின் தூதர்களாக களமிறக்கப்படும் புத்த பிட்சுகள்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தலித் வாக்குகளை அள்ளுவதற்காக மோடியின் தூதர்களாக புத்த பிட்சுகள் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச்- ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் இம்மாநிலத்தின் பெரும்பாலான தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இதனாலேயே மத்தியில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
இதனை தக்க வைத்துக் கொள்ளவும் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது பாஜக. இதன் முதல் கட்டமாக புத்தமதம், அம்பேத்கர் குறித்த பிரதமர் மோடியின் பார்வை குறித்து பிரசாரம் செய்வதற்காக புத்த பிட்சுகள் களமிறக்கப்பட உள்ளனர்.

சாரநாத்தில் வரும் சனிக்கிழமையன்று 80 புத்த பிட்சுகள் கொண்ட குழு பிரசாரத்தை தொடங்குகிறது. இதனை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தொடங்கி வைக்கிறார். இதேபோல் 4 கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த பிரசாரத்தை முழுமையாக பிரதமர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்க உள்ளது.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை தலித் மக்களின் வாக்குகளை மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சிதான் வைத்திருக்கிறது. இதனை உடைப்பதற்காகவே பாஜக இத்தகைய பிரசார இயக்கத்தை முன்னெடுக்கிறது.
அதுவும் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து தற்போது பாஜகவுக்கு தாவிய தலைவர்களை வைத்து இந்த பிரசாரத்தை பாஜக நடத்துகிறது. இதனால் தலித் வாக்குகளை கணிசமான அளவு பிரித்துவிட முடியும் என்பது பாஜகவின் கணக்கு.












Click it and Unblock the Notifications