சாப்ட்வேர் தயாரிப்பை பெருக்கும்! மத்திய பட்ஜெட்டுக்கு சாப்ட்வேர் கூட்டமைப்பு வரவேற்பு
பெங்களூர்: இந்தியாவை பொருள் உற்பத்தி சார்ந்த நாடாக உருமாற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருந்ததாக இந்திய சாப்ட்வேர் பொருள், தொழில் வட்ட மேஜை அமைப்பு (iSPIRT) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெங்களூர் வந்தபோது, ஐஎஸ்பிஐஆர்டி மற்றும் சாப்ட்வேர் புராடக்ட் இன்டஸ்ட்ரியுடன் ஆலோசிக்க நேரம் ஒதுக்கியிருந்தார். அப்போது நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் கவனம் கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவோம் என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எது இல்லையோ மற்றும் இருக்கிறதோ அவை இரண்டுக்கும் நடுவே இணைப்பை ஏற்படுத்துவோம் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். சாப்ட்வேர் உற்பத்தி தொடங்க சிறப்பு கவனம் கொடுப்போம் என்பதுதான் இந்த உரையின் உள் அர்த்தம்.
அதுபோல, சிறுதொழில் நிறுவன தொழில் முதலீட்டுக்கான எக்கோ-சிஸ்டம் உருவாக்க ரூ.10,000 கோடி செலவில் நிதியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கது. இந்தியாவை உற்பத்தி சார்ந்த நாடாக உருமாற்றும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருந்தது. சாப்ட்வேர் உற்பத்தி மீதான வாட் மற்றும் சேவை ஆகிய இரு வரி விதிப்புகள் குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை என்றபோதிலும், இரட்டை வரி விதிப்பு பிரச்சினையை மத்திய அரசு தீர்க்கும் என்று நம்புகிறோம். பட்ஜெட்டில் அறிவிக்கப்படாத திட்டங்களை கேட்டு பெற முயற்சி செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.