அடையாளமே இல்லாமல் போகும் காங்கிரஸ்! வட இந்தியாவில் கேப்பில் உள்ளே வரும் ஆம் ஆத்மி.. தேசிய அரசியல் மாறுதே
டெல்லி: நாட்டின் 4 மாநிலங்களில் 5 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் இப்போது வெளியாகி வருகிறது. இதில் காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. மற்ற 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ் எந்தவொரு தொகுதியிலும் கடும் போட்டியைக் கூட கொடுக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது.
நமது நாட்டில் 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளில் கடந்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரளா, குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றன. இந்த இடைத்தேர்தல் முடிவுகள் ஆட்சி அதிகாரத்தை மாற்றாது என்ற போதிலும் மக்களின் மனநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இந்த தேர்தல் அமைகிறது.

இடைத்தேர்தல் முடிவுகள்
இதற்கிடையே இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் 5 இடங்களில் இப்போது வரை காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.. கேரளாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஆர்யதன் ஷௌகத் வாக்கு எண்ணிக்கை முடிவில் 77,737 வாக்குகளைப் பெற்று சுமார் 11 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார், சிபிஎம் வேட்பாளர் சுவராஜ் 66,660 வாக்குகள் உடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை முடிவில் திரிணாமுல் வேட்பாளர் அலிஃபா அகமது 1,02,759 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் (52,710 வாக்குகள்), காங்கிரஸ் வேட்பாளர் கபில் உதின் ஷேக் (28,348 வாக்குகள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
பஞ்சாபில் கூட சரிவு
பஞ்சாபிலும் கூட ஆம் ஆத்மி வேட்பாளரே வென்றுள்ளார். அங்கு தொடக்கத்தில் ஓரளவுக்குப் போட்டி இருந்தாலும் பிறகு ஆம் ஆத்மி நல்ல முன்னிலையைப் பெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் ஆம் ஆத்மி வேட்பாளர் 35,179 வாக்குகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் முறையே 24,542 வாக்குகள் மற்றும் 20,323 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
குஜராத்தில் காடி தொகுதியில் பாஜக வெற்றி பெற்றது.. அங்குக் காங்கிரஸ் 60,290 வாக்குகளையும் ஆம் ஆத்மி 3090 வாக்குகளையும் பெற்றுள்ளது. அதேநேரம் இடைத்தேர்தல் நடந்த மற்றொரு தொகுதியான விசாவதரில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஆம் ஆத்மியின் இத்தாலியா கோபால் அங்கு 75,942 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார். பாஜகவின் கிரித் படேல் 58,388 வாக்குகளைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மொத்தமே வெறும் 5,500 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
இதில் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை என்றாலும் செல்வாக்குடன் இருக்கிறது. ஆனால், வட இந்தியாவில் செல்வாக்கைத் தொடர்ந்து இழந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. மேற்கு வங்கத்தில் ஓரளவுக்குப் போட்டியைக் கொடுத்தாலும் பாஜக அளவுக்குக் கூட காங்கிரஸால் வாக்குகளைப் பெற முடியவில்லை.
வட இந்தியாவில் நோ சான்ஸ்
பஞ்சாபில் கடந்த தேர்தலுக்கு முன்பு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இப்போது 2வது இடத்திற்கு பாஜக உடன் போட்டுப் போடும் நிலையில் உள்ளது. குஜராத்தில் காங்கிரஸ் ஏற்கனவே பலவீனமாக இருக்கும். ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் விசாவதரில் ஆம் ஆத்மி பாஜகவுக்கு கடும் போட்டி கொடுக்கிறது. ஆனால், காங்கிரஸ் போட்டியிலேயே இல்லை. வட இந்தியாவில் காங்கிரஸ் தொடர்ந்து செல்வாக்கை இழந்து வருவதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications