'நண்பேன்டா'வாகும் 'ஜனதா' கட்சிகள்.. தலைவராகும் முலாயம்சிங்.. வீழ்த்தப்படுமா பா.ஜ.க.?
டெல்லி: பீகார் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் உட்பட 6 ஜனதா பெயரிலான கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கட்சி உதயமாக இருக்கிறது.. இக்கட்சியின் தலைவராக முலாயம்சிங் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.. இந்த புதிய கட்சியானது பாரதிய ஜனதாவின் விஸ்வரூபத்தை வீழ்த்துமா என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் தற்போதைய விவாதப் பொருள்..
லோக்சபா தேர்தலில் "ஜனதா" பெயரிலான கட்சிகள் அனைத்தும் தனித்து போட்டியிட்டன.. அத்தனை ஜனதாக்களையும் துவம்சம் செய்து பாரதிய ஜனதா கட்சி அரியணையை கைப்பற்றியது.
இதில் ஜனதா கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஆடிப் போய் எதிர்காலமே கேள்விக்குள்ளாகிவிட்டதாக பீதியடைந்து போயினர்.. இதனால் பீகார் பரம எதிரியாக இருந்துவந்த ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவும் முதல் கட்டமாக 'நண்பேன்டா'கினர்.
6 கட்சி இணைவு
இந்த அச்ச ஜூரம் மெது மெதுவாக விரிவடைந்து கடைசியாக 'ஜனதா' பெயரிலான அனைத்து கட்சிகளும் பேசாம ஒரே கட்சியாகிவிடலாமே என்ற புள்ளிக்கு வந்து நின்றது. ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தள், சமாஜ்வாடி கட்சி, இந்திய தேசிய லோக் தள் மற்றும் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகளும் ஒன்றிணைய முடிவெடித்தன.
அன்று ஜனதா
அது என்ன ஜனதா? 1977ஆம் ஆண்டு நாட்டில் இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்த நிலையில் தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சித் தலைவர்களாக இருந்த ஜெய்பிரகாஷ் நாரயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்டோர் இணைந்து ஜனதா கட்சியை தொடங்கினர். இதில் ஜனதா மோர்ச்சா, சரண்சிங்கின் பாரதிய லோக் தள், சுதந்திரா கட்சி, சோசலிஸ்ட் கட்சி, பாரதிய ஜன சங் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
யார் யார்?
இந்த கட்சியின் தலைவராக மொரார்ஜி தேசாய், பொதுச்செயலராக ராமகிருஷ்ண ஹெக்டே, ஜன சங்கத் தலைவரான அத்வானி செய்தி தொடர்பாளராக இருந்தனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் உட்கட்சி மோதல்களாள் ஜனதா கட்சி அரசு நீண்டகாலம் நிலைக்கவில்லை.
ஜனதா தள பிள்ளைகள்
இதன் பின்னர் ஜனதா கட்சி சுக்கு நூறாக உடைந்தது.. பாரதிய ஜனதா கட்சி, ஜனதா தளம் என வெவ்வேறு கட்சிகளாகின. இதில் தற்போது இணையும் 6 கட்சிகளுமே ஜனதா தளத்தில் இருந்து பிரிந்தவை. இதனால் இந்த ஜனதா தள கட்சிகள் மீண்டும் ஒரு கட்சியாகிவிட முடிவு செய்துள்ளனர்.
தலைவராகும் முலாயம்
தற்போது இந்த புதிய கட்சிக்கு சமாஜ்வாடி ஜனதா தளம் அல்லது சமாஜ்வாடி ஜனதா கட்சி என்ற பெயர் சூட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவை தலைவராக்கவும் முடிவு செய்துள்ளனர்.
லோக்சபா பலம்
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை இந்த ஜனதா கட்சிகளுக்கு ராஜ்யசபாவில்தான் பலம் அதிகம்...லோக்சபாவில் பாதி அளவுதான்..
லோக்சபா பலம்: 15 எம்.பிக்கள்
சமாஜ்வாடி- 5
ராஷ்டிரிய ஜனதா தள்- 4
ஐக்கிய ஜனதா தளம்-2
இந்திய தேசிய லோக் தளம்- 2
மதச்சார்பற்ற ஜனதா தளம்- 2
ராஜ்யசபாவில் 30 எம்.பிக்கள்
ராஜ்யசபா பலம்: 30 எம்.பிக்கள்
சமாஜ்வாடி- 15
ராஷ்டிரிய ஜனதா தள்- 1
ஐக்கிய ஜனதா தளம்-12
இந்திய தேசிய லோக் தளம்- 1
மதச்சார்பற்ற ஜனதா தளம்- 1
வாக்கு சதவீதம் என்ன?
2014 நாடாளுமன்ற தேர்தலில் 6 கட்சிகளின் வாக்கு சதவீதம்
மதச்சார்பற்ற ஜனதா தளம் 0.67%
ஐக்கிய ஜனதா தளம்- 1.08%
ராஷ்டிரிய ஜனதா தள் - 1.34%
சமாஜ்வாடி - 3.37%
இந்திய தேசிய லோக்தள்- 0.51%
சமாஜ்வாடி ஜனதா கட்சி 0.01%
மாநிலங்களில்..
மாநில அளவில் 6 கட்சிகளின் பலம்
சமாஜ்வாடி (உ.பி.) மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 232 இடங்களை கைப்பற்றியுள்ளது
ராஷ்டிரிய ஜனதா தள்- பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 24 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம்- பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 110 இடங்களை தம் வசம் வைத்துள்ளது.
இந்திய தேசிய லோக் தளம்- ஹரியானாவில் 77 தொகுதிகளில் 18 இடங்களில் வென்றுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளம்- கர்நாடகாவில் 225 தொகுதிகளில் 40 ஐ தம் வசம் வைத்துள்ளது.
பீகார் தேர்தல் களம்
இந்த புதிய கட்சியின் முதல் அக்னி பரீட்சையாக பீகார் தேர்தல் களம் அமைய இருக்கிறது. பீகாரில் தற்போது ஆளும் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் இருக்கிறது. 'உற்ற தோழனாக' ராஷ்டிரிய ஜனதா தளம் இருக்கிறது.
பா.ஜ.க. மும்முரம்
இந்த இரு கட்சிகளின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. தற்போதை நிலையில் புதிய கட்சி ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொண்டால் பீகாரில் ஆட்சியை தக்க வைக்கலாம் என்பது இவற்றின் கணக்கு.
ஆனால் மத்தியில் ஆளும் அரசாக இருப்பதால் பீகாரை எப்படியும் தனித்தே கைப்பற்றுவோம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் வியூகம்.
போராடும் ஜனதாக்கள்
அக்னி பரீட்சையில் வென்றால்தான் ஐக்கியம் நிலைக்கும் என்ற நிலையில் வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள் 'ஜனதா' தலைவர்கள்..