தொடர்ந்து வாலாட்டும் பாகிஸ்தான்.. பதிலடி தராத இந்தியா.. காரணம் என்ன தெரியுமா? #uriattack
டெல்லி: காஷ்மீர் மாநிலம் யூரியில் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.
பதிலடி தாக்குதலுக்கு, தயாராகும்படி இந்தியாவுக்கு பல தரப்பில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குவதிலும், அதில் வெற்றி பெறுவதிலும், இந்திய ராணுவத்திற்கு எந்த திறமை குறைபாடும் கிடையாது. அதை வெற்றிகரமாக நடத்தும் வல்லமை சிறப்பு படைக்கு உள்ளது.
அதேநேரம், பாகிஸ்தான் ஒரு அணு ஆயுத நாடு என்பதை மறுக்க முடியாது. முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்க தயங்காத நாடு என்பதும் காரணம்.
பாகிஸ்தானுக்கு தெரியும்
இந்தியா திருப்பி தாக்காது என்ற தைரியத்தில்தான் மும்பை, பதன்கோட் போன்ற பகுதிகளில் பாக். தனது தீவிரவாதிகளை கொண்டு, எளிதில் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தும், அந்த நாட்டை தாக்க முடியாததற்கு, அந்த நாட்டின் அணு ஆயுத பலம் ஒரு முக்கிய காரணம்.
மின்யான்மரில் பதிலடி
ஆனால், இப்படியே பதிலடி தராமல்விட்டாலும், பாகிஸ்தான் அடங்காது. மணிப்பூரில் இந்திய ராணு வீரர்கள் கொல்லப்பட்டபோது மியான்மர் எல்லைக்குள் புகுந்து சென்று தீவிரவாதிகளை கொன்று ஒழித்த திறமையுள்ளதுதான் இந்திய ராணுவம். பாகிஸ்தானில் அதுபோன்ற தாக்குதலை நடத்த தவிர்ப்பதற்கு அணு ஆயுதம் முக்கிய காரணம்.
சீனா ஆதரவு
அணு ஆயுத பிரச்சினையோடு, சீனாவின் ஆதரவும் முக்கிய காரணம். சீனாவும் அணு ஆயுத நாடு என்பது இதில் கவனிக்கத்தக்கது. மேலும் இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சீனாவை விஞ்சக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது.
பொருளாதாரம் முக்கியம்
இந்த சூழ்நிலையில், தாக்குதல் தவறாகி போனால், சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைக்கு நாம் உள்ளாக நேரிட்டால் அது மிகப்பெரிய அடியாக அமைந்துவிடும். பாகிஸ்தானுக்கு இழக்க எதுவுமே கிடையாது. ஆனால் இந்தியாவுக்கு இழக்க அதிகம் உள்ளது. இதுவும் பதிலடி தாக்குதலை நடத்தாமல் இருக்க முக்கிய காரணம்.