அந்த 4 பேரையும் தூக்கிலிடும் வரை நிம்மதி இல்லை: டெல்லி மாணவியின் தாய் கண்ணீர்
டெல்லி: தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 4 பேரையும் தூக்கில் போடும் வரை தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று டெல்லியில் ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் தூக்கு தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
இந்நிலையில் இது குறித்து மாணவியின் அம்மா கண்ணீர் மல்க கூறுகையில்,
சமூகத்தை அசிங்கப்படுத்திய அவர்களுக்கு தூக்கு தண்டனை நியாயமானது தான். இந்த தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்தே. ஆனால் அவர்களை தூக்கில் போடும் வரையில் எங்களுக்கு நிம்மதி இருக்காது என்றார்.
மாணவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மைனர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் 3 ஆண்டுகள் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவன் வெளியே வந்துவிடுவானே என்று கேட்டதற்கு, மாணவியின் தந்தை கூறுகையில்,
மைனரின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த விஷயத்திலும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.