ஜெ. வழக்கில் ஆஜரானதால் காவிரி வழக்கில் விட்டுக்கொடுத்தாரா கர்நாடகா வக்கீல்? சட்டக் குழு சீற்றம்
பெங்களூர்: காவிரி பிரச்சினைகள் வரும்போதெல்லாம், தமிழகத்தில் ஆளும் முதல்வர்கள் மீதே கன்னட சங்கங்கள் கடும் கோபம் காண்பிக்கும். இம்முறை ஜெயலலிதாவும் அந்த கோபத்திற்கு தப்பவில்லை என்றபோதிலும், அவருக்கு ஈடாக ஒரு நபர் கன்னட சங்கங்கள் கோபத்திற்கு உள்ளானார் என்றால் நம்ப முடிகிறதா.
10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவி்ட்டதை எதிர்த்து கன்னட அமைப்புகள் நேற்று கர்நாடகா பந்த் நடத்தின.
இந்த பந்த்தால் முழு அளவில் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூரில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்குதலுக்கு தப்பவில்லை.

அவமரியாதை
பெங்களூர், மைசூர், மண்டியாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப்படம், உருவபொம்மைகள் அவமரியாதையுடன் சித்தரிக்கப்பட்டன. கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன. கர்நாடக முதல்வர் சித்தராமையா, நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டில், பிரதமர் மோடி ஆகியோரும் இந்த அவமரியாதை போராட்டங்களுக்கு தப்பவில்லை.

வக்கீல் மீது கோபம்
அதேநேரம், மற்றொரு முக்கிய நபரும் கர்நாடக சமூக வலைத்தளங்களிலும், போராட்டங்கலிலும் பேசுபொருளாக, விமர்சனத்திற்கு உள்ளாகுபவராக இருந்தார். அவர் வேறுயாருமல்ல, காவிரி வழக்கில் கர்நாடகாவுக்காக ஆஜராகும், மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காவிரி வழக்கில் தமிழகம் 52 டிஎம்சி தண்ணீரை கேட்டு வாதாடியபோது, 10 ஆயிரம் கன அடி தண்ணீரை வேண்டுமானால், நல் உறவுக்கு ஆதாரமாக வழங்க தயார் என கூறியிருந்தார் நாரிமன்.

15 ஆயிரம் கன அடி நீர்
கர்நாடக வாதத்தை கேட்ட நீதிபதிகள், வாழு, வாழ விடு என்ற வகையில் கர்நாடகா செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறியதோடு, தமிழகத்திற்கு தினமும் 15 ஆயிரம் கன அடி நீர் என்ற வகையில் 10 நாட்களுக்கு விட வேண்டும் என உத்தரவிட்டனர். ஃபாலி நாரிமன், பத்தாயிரம் கன அடி தண்ணீர் தருவதாக கூறியதுதான், தங்களது நீர் இழப்புக்கு காரணம் என கொந்தளிக்கிறார்கள் கர்நாடக விவசாயிகளும், கன்னட அமைப்பினரும்.

சிறப்பு பேட்டி
இதுகுறித்து கர்நாடக சட்ட வல்லுநர் குழுவிலுள்ள மோகன் கடர்கி, 'ஒன்இந்தியா'வுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியது: நாரிமனை கேலி செய்யும் விவகாரம், சித்தராமையா கூட்டியிருந்த அனைத்து கட்சி கூட்டத்திலேயே தொடங்கிவிட்டது. பாஜகவின் ஈஸ்வரப்பாவும், ம.ஜ.தவின், ஒய்.எஸ்.வி.தத்தாவும், நாரிமன் எந்த வழக்கையும் வென்றதாக வரலாறு இல்லை என ஜோக் அடித்தனர். மாநில நலனுக்காக வாதாடும் ஒருவர் குறி வைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.

குறைந்த பணம்
நாரிமனுக்கு வழக்கு கட்டணமாக நிறைய பணத்தை வாங்குவதாக வதந்தி பரப்பப்படுகிறது. உண்மையில், மிக சொற்ப அளவில்தான் அவர் சம்பளம் வாங்கப்படுகிறார். தமிழக வழக்கறிஞர்கள் பணம் வாங்காமல் தமிழகத்திற்காக வாதாடுவதாகவும் வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பப்படுகிறது. காவிரி தொடர்பான எந்த வழக்கிலுமே நாரிமன் டீம் வெற்றி பெற்றதில்லை என்ற வாதம் பொய்யானது.

உழைப்பு அதிகம்
ஒரு கட்டத்தில், ஆண்டுக்கு 380 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டிய நிலையில் இருந்த கர்நாடகா தற்போது 192 டிஎம்சி கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வருவதற்கு நாரிமன் டீமின் உழைப்பு காரணம். சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும்போது இந்த நீரின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளது.

ஜெயலலிதாவுக்காக ஆஜரானவர்
அலமாட்டி அணைக்கட்டு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுக்கொடுத்தது நாரிமன் டீம்தான். மேலும் ஜெயலலிதாவுக்காக, ஹைகோர்ட்டில், சொத்துக் குவிப்பு வழக்கில் நாரிமன் ஆஜராகி அவருக்கு ஜாமீன் பெற்றுத் தந்ததுதான், காவிரி விவகாரத்தில் விட்டுக்கொடுக்க காரணம் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஒரு வழக்கில் எந்த ஒரு வழக்கிலும், யாருக்காகவும் வாதாட தகுதிபெற்றவர். உரிமை பெற்றவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications