காவிரி: சித்தராமையாவுக்கு டபுள் வெற்றி!
Recommended Video
பெங்களூர்: காவிரி தீர்ப்பு மற்றும், பட்ஜெட் அறிவிப்புகளால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு தேர்தல் மைலேஜ் கிடைத்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வெளியானது. இதில் தமிழகத்திற்கான நீரின் அளவு 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சிகளாக குறைக்கப்பட்டதோடு, அந்த நீர் கர்நாடகாவிற்கு வழங்கப்பட்டது.
தங்களுக்கு பாதகமான தீர்ப்பு வந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த கர்நாடக அரசுக்கு இது பெரிய ரிலீஃப். காரணம் இன்னும் 2 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்தான்.
உணர்வுப்பூர்வம்
காவிரி என்பது கர்நாடகாவில் உணர்வுப்பூர்வமாக அணுகப்படுகிறது. எனவே தமிழகத்திற்கு ஆதரவான தீர்ப்பு வந்திருந்தால், அதை வைத்து எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து, ஆளும் காங்கிரசின் தோல்வி என கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கும். ஆனால் இப்போது சித்தராமையா காட்டில் மழை. தனது தலைமையிலான அரசுதான் சிறப்பாக வாதங்களை முன்வைக்க ஏற்பாடு செய்து, முதல் முறையாக தண்ணீர் அளவை குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது என்று சித்தராமையா பிரச்சாரம் செய்வார்.
தேர்தல் அறிவிப்பு
காவிரி பாசன பகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு உள்ள சிறு வாக்கு வங்கிகையும் காங்கிரஸ் அள்ளிக்கொள்ள இது ஒரு வாய்ப்பு. அதேநேரம், இன்று சித்தராமையா அரசு தனது பதவிக்காலத்தின் இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முதல்வரும் நிதி அமைச்சகத்தை தன்வசம் வைத்துள்ளவருமான சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். அதிலும் விவசாயிகளை ஈர்க்கும் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக சித்தராமையா அறிவித்தார்.
6 ஆயிரம் கோடி
விவசாய துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ. 5849 ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 'ரைத்த பெலக்கு' என்ற திட்டத்தை சித்தராமையா அறிவித்தார். வறண்ட பூமியிலுள்ள 70 லட்சம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் திட்டம் இது. நாட்டிலேயே விவசாயத்திற்காக அறிவிக்கப்பட்ட பெரிய திட்டம் இது என சித்தாரமையா தெரிவித்தார். இந்த நிலையில்தான், காவிரி தீர்ப்பும் சித்தராமையாவுக்கு கை கொடுக்கும். இது டபுள் வெற்றி.
சித்தராமையாவுக்கு லாபம்
கர்நாடகாவில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி வெல்லவே வாய்ப்பு அதிகம் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், சித்தராமையாவின் அடுத்தடுத்த வெற்றிகள் காங்கிரசுக்கு பலம் சேர்க்கும். அதேநேரம், பாஜகவும் சும்மா இருக்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அதில் தலையிட்டு, நாடாளுமன்றத்திற்குதான் அந்த அதிகாரம் உள்ளது என மத்திய அரசு கூறியது. இதையே தூக்கிப்பிடித்து பாஜக பிரச்சாரம் செய்யும். எனவே காவிரி விவகாரம் கர்நாடக தேர்தலில் முக்கிய பாத்திரம் வகிக்கப்போவது நிச்சயமாகும்.