தினமும் கிளம்பி வர்றாங்களே- காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தர எதிர்ப்பு: 36-ம் நாள் மண்டியா போராட்டம்!
மண்டியா: தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகாவின் மண்டியாவில் 36-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கான காவிரி நதிநீர் உரிமையை தரவே கூடாது என்பதுதான் கன்னட அமைப்புகள், விவசாயிகள் போராட்டம். காவிரி மேலாண்மை ஆணையமோ உச்சநீதிமன்றமோ உத்தரவிட்டாலும் 'மதிக்கவே' கூடாது 'மிதிக்க' வேண்டும் என்பதுதான் இவர்களது கோரிக்கை.

தமிழ்நாட்டுக்கு சொற்ப அளவிலான நீரை கர்நாடகா திறந்துவிடுகிறது. இதனையும் கூட திறக்கவே கூடாது என்கின்றன கன்னட அமைப்புகள். இதனால் மண்டியா பந்த், கர்நாடகா பந்த், பெங்களூர் பந்த் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
மண்டியாவில் தொடர் போராட்டம்: தமிழ்நாட்டுக்கு எதிராக கர்நாடகா பாஜக தொடங்கி வைத்த போராட்டம் மண்டியாவில் நேற்று 36-வது நாளாக நீடித்தது. இதனால் மண்டிய விசுவேஸ்வரய்யா சிலை பகுதி போர்க்களமாக மையம் கொண்டிருக்கிறது. அகில பாரத ஜீவ விமா, கதம்பை சைன்யா, பாரதிய மஜ்ஜர் சங்கம், மேகதாது போராட்ட குழு என வரிசை வரிசையாய் கன்னட அமைப்பினர் நேற்றைய கன்னட விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காவிரி ஹித ரஷ்னா என்ற அமைப்பினர் மைசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
36-வது நாள் போராட்டத்தால் பதற்றம்: இன்னொரு கன்னட அமைப்பினர் மண்டியா காவிரித் தாய் சிலைக்கு பூஜைகள் நடத்திய கையோடு குடகு மாவட்டத்தின் தலைக்காவிரிக்கு வாகன பேரணியாகவும் சென்றனர். மண்டியா போராட்டங்களில் பங்கேற்றவர்கள், தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்காதே! முதல்வர் சித்தராமையா- துணை முதல்வர் டிகே சிவகுமார் பதவி விலகு! என முழக்கங்களை எழுப்பினர். 36 நாட்களாக மண்டியாவில் போராட்டம் நீடிப்பதால் அங்கு பதற்றமான சூழ்நிலை தொடர்ந்து நிலவுகிறது.
சிக்கமகளூர் போராட்டம்: இதேபோல சிக்கமகளூரிலும் கன்னட அமைப்பினர் தமிழ்நாட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் ஆகியோர் கூட்டணை அமைத்து ஒப்பந்தம் போட்டு கர்நாடகாவுக்கு துரோகம் செய்து வருகின்றனர்; தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் அதை நிறுத்த செய்யும் போராட்டத்தில் குதிப்போம் எனவும் சிக்கமகளூர் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications