காவிரி மேலாண்மை செயல்திட்டம்.. முடிவாகாத பெயர்.. தலைமையிடம் மட்டும் பெங்களூரில்!
காவிரி மேலாண்மை வரைவு திட்டத்திற்கான தலைமையிடம் பெங்களூரில் செயல்படும் என்றும், இதற்கு விரைவில் புதிய பெயர் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வரைவு திட்டத்திற்கான தலைமையிடம் பெங்களூரில் செயல்படும் என்றும், இதற்கு விரைவில் புதிய பெயர் வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார். காவிரி வழக்கில் வரைவு திட்ட அறிக்கை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகி, வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்கள் 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி தொடர்பான வழக்கை மே 16ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த 14 பக்க வரைவு அறிக்கையில் சில முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த காவிரி மேலாண்மை செயல்திட்டத்திற்கு என்று எந்த பெயரும் வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ''காவிரி மேலாண்மை செயல்திட்டம் 2018'' என்று பெயர் வைத்துள்ளனர். என்ன மாதிரியான பெயர் சூட்டலாம் என்ற உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.
இந்த செயல்திட்டத்தை நிர்வகிக்க அனைத்து மாநிலங்களும் செலவு செய்ய வேண்டும். அதாவது, காவிரியில் இருந்து நீர் பெறும் 4 மாநிலங்களும் இந்த செயல்திட்டதிற்கான செலவை பிரித்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுத்தப்படியாக, மிக முக்கியமான விஷயம், இந்த காவிரி மேலாண்மை செயல்திட்ட அமைப்பின் தலைமையிடம் பெங்களூரில் செயல்படும்.
இதற்கு தனியே பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பிரச்சனை வரும் சமயங்களில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.மொத்தம் இதில் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். யார்,யார் எந்த மாநிலம் என்பது அடுத்தகட்ட விசாரணையில் முடிவாகும்.