கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழக லாரி டிரைவர்களுக்கு உதவிகள் எப்படி குவிகிறது பாருங்கள்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த லாரி டிரைவர்களுக்கு உதவிகள் குவிந்தவண்ணம் உள்ளன.
தமிழக லாரி டிரைவர் ஒருவர் சித்ரதுர்கா அருகே லுங்கி அவிழ்த்து ஜட்டியோடு உட்கார வைத்து அவமானப்படுத்தப்பட்டார். பெங்களூர் அருகே முதிய லாரி டிரைவர் கும்பலால் சரமாரியாக அடித்து உதைக்கப்பட்டார். சிரித்தபடியே நின்ற அவரை சரமாரியாக கன்னட அமைப்பினர் அடித்த வீடியோ வெளியாகி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பதிலுக்கு வன்முறையில் ஈடுபடாமல் பக்குவப்பட்ட தமிழக நண்பர்கள் சிலர், இந்த லாரி டிரைவர்கள் துயரத்தை துடைக்க தங்களால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பேஸ்புக் பிரபலங்கள்
சுபாஷ் சுந்தர் என்பவர் தனது பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பாதிக்கப்பட்ட நாமக்கல் ஒட்டுனரின் பெயர் மணிவேல் (சித்ரதுர்கா அருகே லுங்கியை அவிழ்த்து அவமானப்படுத்தப்பட்டவர்) , இன்று காலையில் அவருடன் பேசினேன். மிகவும் வெள்ளந்தியாகப் பேசினார்.

அழுதுவிட்டார்
நடந்ததை விவரிக்கையில் அழத்தொடங்கிவிட்டார், அவருக்கு நாங்கலாம் உங்களுக்கு இருக்கிறோம் கவலைப்படாதீர்கள் என ஆறுதல் கூறினேன். முதல் கட்டமாக அவருடைய வங்கி கணக்குக்கு 2500 ரூபாய் அனுப்பியுள்ளேன். ஊருக்குத் திரும்ப வந்தவுடன் நேரில் சந்திக்க உள்ளேன். அவரது மொபைல் எண்ணை அவர் அனுமதியுடன் பகிர்கிறேன்.

செல்போன் எண், வங்கி கணக்கு
இவ்வாறு கூறி, அவரது செல்போன் எண்ணையும், வங்கி கணக்கு எண்ணையும் பகிர்ந்துள்ளார் சுபாஷ் சுந்தர். இதேபோல பெங்களூர் அருகே வயது முதிர்ந்த தமிழக லாரி டிரைவரை நாலைந்து பேர் சேர்ந்து கன்னத்தில் அடித்து உதைத்த காட்சியும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இவர் மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த மஞ்சமாலை என தெரியவந்துள்ளது.

பெரியவருக்கு உதவி
மற்றொரு பேஸ்புக் பிரபலமான ரா புவன் இந்தப் பெரியவருடன் தொடர்பில் உள்ளார். அவர் பெரியவருக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.

நெஞ்சில் கல் அடி
இவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், பெரியவர்கிட்ட பேசிட்டேன். அவர் பெயர் மஞ்சமாலை. மதுரை விளாங்குடி ஊருக்காரர். கல்லைத்தூக்கி நெஞ்சுல அடிச்சதால காயம் & உள் காயம். சிரமத்தோட ஊருக்கு வந்துட்டு இருக்கார். (பத்திரமா வந்துட்டு இருக்கார் என்பதை போன ஸ்டேட்டஸ்ல பத்திரமா வந்துட்டார் என்று தவறாக எழுதிவிட்டேன்). இன்றிரவு ஊருக்கு வந்துடுவாராம்.

உதவி செய்ய முயற்சி
என்ன பேசுறதுன்னு தெரியல. நடந்தது எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க, வீடியோ பார்த்ததுல இருந்து மனசு சரியில்ல, இப்ப ஒண்ணும் பிரச்சினை இல்லைங்களேன்னு கேட்டேன். அவ்ளோதான். வண்டிக்கு சேதாரம் ஆகியிருக்குன்னார். நாளைக்கு நேர்ல ஃப்ரெண்ட்ஸை அனுப்பி என்ன ஏதுன்னு முழுசா தெரிஞ்சுக்கிட்டு உதவி பண்றேன் ஐயான்னு சொல்லிருக்கேன்.

உதவிகள் குவிகிறது
உலகம் ரொம்ப சின்னது. அவரை கண்டுபிடிக்க உதவிய முகம்தெரியாத நண்பர்களுக்கு ரொம்ப நன்றி. மகிழ்ச்சி. இவ்வாறு இவர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தும்கூரில் தமிழக லாரிகள் அதிக அளவில் தேங்கியிருந்தன. அவற்றை கர்நாடக தமிழ் அமைப்புகள், சங்கங்களின் பிரதிநிதிகள், அதிலும் குறிப்பாக மைசூர் தமிழ் தமிழ் சங்கத்தின் புகழேந்தி, பத்திரமாக தமிழகம் அனுப்ப உதவியுள்ளார். உள்ளூர் தமிழ் ஊடகங்களின் செய்தியாளர்களும், தங்கள் பிரபல்யத்தை பயன்படுத்தி, தும்கூர் போலீஸ் எஸ்.பியிடம் பேசி ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு இரவோடு இரவாக லாரிகளை அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications