தண்ணீர் விட எதிர்ப்பு - கர்நாடகா விவசாயிகள் கழுத்தில் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம்
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மீண்டும் ஒருவாரத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பெங்களூரு - மைசூர் சாலையில் கன்னட அமைப்பினருடன் இணைந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் கழுத்தில் பச்சை நிற துணியை கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தி வருவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவிரியில் 50 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யுயோ லலித் அமர்வு முன்பு நேற்று விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் காவிரியில் இருந்து விநாடிக்கு 6,000 கனஅடி வீதம், 27ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
Protest by farmers at Mysore road in Bengaluru (Karnataka), tie noose around their necks #CauveryProtests pic.twitter.com/TOv7kRdjmr
— ANI (@ANI_news) September 21, 2016
உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் தமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதே நேரத்தில் கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆட்சேபனைகளை காவிரி மேற்பார்வை குழுவில் 3 நாட்களுக்குள் தாக்கல் செய்து கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்று தமிழகத்தில் விவசாய சங்கங்கள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீர்ப்பிற்குப் பின்னர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதல்வர் சித்தராமய்யா உச்சநீதிமன்ற உத்தரவு செயல்படுத்த இயலாது என்றார். உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக புதன்கிழமையன்று மாலை 5 மணிக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் சித்தராமய்யா தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர், எம்.பி.க்கள் கூட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மீண்டும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எல்லைப்பகுதிகளில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. நேற்று மாலை முதலே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் ஒரு தட்டில் மண்ணை எடுத்துக் கொண்டு வாய்களில் போட்டுக்கொண்டு முழக்கமிட்டனர். கர்நாடக மக்களின் வாய்களில் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது உச்சநீதிமன்றம் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் பெங்களூரு - மைசூரு சாலையில் தங்களின் கழுத்தில் பச்சை நிற துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மறியல் போராட்டத்தால் கர்நாடகாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.