அணைகள் நீர் இருப்பு பற்றி அறிவியல் பூர்வ ஆய்வு.. காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் அதிரடி முடிவு
டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் துவங்கியுள்ளது.
மத்திய நீர்வளத்துறை கமிஷனர் நவீன்குமார் தலையில் கூட்டம் நடந்தது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில தலைமை பொறியாளர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை எடுத்து வைத்தனர். தமிழகம் சார்பில் தலைமை பொறியாளர் செந்தில்குமார் பங்கேற்றார்.
கடந்த 2ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் நடைபெற்றது.
ஜூலை மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறக்க அப்போது உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் துணை அமைப்பான காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது. கர்நாடக, தமிழக அணைகளின் நீர் இருப்பு, தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு போன்றவை இதில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் நிருபர்களிடம் நவீன்குமார் கூறுகையில், ஒவ்வொரு அணைகளின் நீர் வரவு, வெளியேற்றம் குறித்து ஆலோசித்தோம். பல்வேறு வகைகளில் நீர் இருப்பு புள்ளி விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம். நீர் இருப்பை சரியாக அளவீடு செய்வது எப்படி என்பது குறித்துதான் இதில் அதிகமாக ஆலோசித்தோம்.
தற்போதுள்ள நடைமுறைகளை தாண்டி, அறிவியல்பூர்வமாக நீர் இருப்பு, நீர் வரத்தை ஆய்வு செய்ய உள்ளோம். அடுத்த 2 வாரங்களில் புதிய நடைமுறைகள் படி 8 அணைகளிலும் உள்ள நீர் இருப்பு அளவீடு செய்யப்படும். இதையடுத்து, ஜூலை 19ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றார்.