ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணம்!.. அமீத் ஷாவுக்கு கோர்ட் கண்டனம்
மும்பை: துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில், சிறப்பு சிபிஐ கோர்ட்டில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கோரி தாக்கல் செய்த மனுவில், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய உதவியாளரும், பாஜக பொதுச் செயலாளருமான அமீத் ஷா கூறிய காரணத்தைக் கேட்டு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
தனது வக்கீல் ராபின் மொகேரா மூலமாக இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் டெல்லியில் நடைபெறும் முக்கியமான கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் நேரில் வர இயலவில்லை என்று கூறியிருந்தார் ஷா.
பிரஜாபதி போல என்கவுண்டர் வழக்கில் ஷா ஒரு முக்கியக் குற்றவாளி. இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மும்பையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரி வருகிறார் ஷா. இந்த நிலையில் தற்போதும் அவர் நேரில் ஆஜராக விலக்கு கோரியுள்ளார். இதற்கு சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிபிஐ வழக்கறிஞர் வாதிடுகையில், செயற்கைத்தனமாக இருக்கிறது இந்த மனு. சரியான காரணம் குறிப்பிடப்படவில்லை. இதை அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார்.
அதற்கு ராபின் மொகேரா பதிலளிக்கையில், முக்கியமான கட்சிப் பணியில் டெல்லியில் பிசியாக இருக்கிறார் ஷா. எனவேதான் அவரால் கோர்ட்டுக்கு வர முடியவில்லை என்றார்.
இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த நீதிபதி உத்பத், ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது காரணம் கூறி விலக்கு கேட்பது உங்களுக்கு வழக்கமாகி விட்டது என்றார் கோபமாக.
அதன் பின்னர் வழக்கை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று ஷா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதற்கு முன்பு ஜூன் 6ம் தேதி ஷா தாக்கல் செய்த மனுவில் தனக்கு கடுமையான சர்க்கரை நோய் இருப்பதால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
வழக்கு என்ன...?
குஜராத்தில் கடந்த 2005ம் ஆண்டு போலி என்கவுண்டர் மூலம் குஜராத் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சோராபுதீன் ஷேக். இவரது மனைவியையும் போலீஸார் திட்டமிட்டுக் கொலை செய்து உடலையும் எரித்து விட்டனர்.
இந்தக் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதிதான். இவர் ஷேக்கின் நெருங்கிய நண்பர் ஆவார். இதையடுத்து இவரையும் 2006ம் ஆண்டு போலி என்கவுண்டர் மூலம் குஜராத் போலீஸார் சுட்டுக் கொன்று விட்டனர்.
இந்த வழக்கில் அமீத் ஷா உள்பட மொத்தம் 38 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷா 12வது குற்றவாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.