சி.பி.ஐ. மனு விசாரணைக்கு ஏற்பு: ஓம் பிரகாஷ் சவுதாலாவின் ஜாமீன் ரத்தாகிறது?
டெல்லி: ஊழல் வழக்கில் சிறையில் இருந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா ஜாமீனை ரத்து செய்யக் கோரும் சிபிஐ மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
ஹரியானா முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக்தளம் கட்சி தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் சிக்கியவர்.
2000-ம் ஆண்டு 3 ஆயிரம் இளநிலை ஆசிரியர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 8 பேருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

மற்ற குற்றவாளிகளான 44 பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது. 79 வயதான ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு மருத்துவ காரணங்களுக்காக மே மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது. வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஹரியானா மாநில தேர்தலுக்காக அவர் தற்போது பிரசாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சவுதாலா நிபந்தனை ஜாமீனை மீறியுள்ளதாகக் கூறி அவரது ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. தேர்தல் முடிந்த 2 நாட்களில் அதாவது 17-ந் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் சி.பி.ஐ. விருப்பம் தெரிவித்தது.
இதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக் கொண்டது. இதனால் சவுதாலாவின் ஜாமீன் எந்த நேரமும் ரத்து செய்யப்படலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications