7 எம்பிகள், 98 எம்எல்ஏக்களின் சொத்து பயங்கர உயர்வு... மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்
நாடு முழுவதும் 7 எம்பிகள் மற்றும் 98 எம்எல்ஏக்களின் சொத்துகள் வருமானத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய நேரடி வரிகள் ஆணையம் கூறியுள்ளது.
டெல்லி :வருமான வரித்துறை விசாரணையில் நாடு முழுவதும் 7 லோக்சபா எம்பிகள் மற்றும் 98 எம்எல்ஏக்களின் சொத்துகள் வருமானத்தை விட அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எம்பி, எம்எல்ஏக்களின் சொத்து வருமானத்தை விட அதிகரிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் எம்எபி எம்எல்ஏக்களின் சொத்து குவிப்பு தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில் 26 லோக்சபா எம்பிகள், 11 ராஜ்யசபா எம்பிகள் மற்றும் 257 எம்எல்ஏக்களின் சொத்து தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களிடம் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முதற்கட்டமாக 26 லோக்சபா எம்பிகளில் 7 பேரின் சொத்து பலமடங்கு உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதே போன்று 257 எம்எல்ஏக்களில் 98 எம்எல்ஏக்களின் சொத்துகளும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக நேரடி வரிகள் ஆணையம் கூறியுள்ளது. மேலும் 42 எம்எல்ஏக்களின் சொத்து உயர்வு குறித்து மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இது வரை நடந்துள்ள விசாரணை விவரங்கள் மட்டுமே தற்போது பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அளவிற்கு அதிகமாக சொத்து சேர்த்த எம்பி, எம்எல்ஏக்களின் பெயர்களை நாளை சீலிடப்பட்ட கவரில் மத்திய நேரடி வரிகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.