அனைத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டாம்- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: சட்டவிரோதமான சுரங்கங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களையும் மூட உத்தரவிட வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதிடுகையில், நாட்டில் உள்ள 218 நிலக்கரி சுரங்கங்களில் 40 சுரங்கங்கள் தயாரிப்புக்கு ஆயத்த நிலையில் உள்ளன. எனவே இவற்றை மூட உத்தரவிட வேண்டாம். அவற்றின் உரிமத்தை முழுமையாக ரத்து செய்து விட வேண்டாம்.
மேலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு மீண்டும் உரிமம் தர அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவற்றில் மறு ஏலத்தை நடத்தவும் மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வாரம் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக அதிரடி உத்தரவு ஒன்றை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. அதில், 1993 ல்இருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும் இதுவரை நிலக்கரி எடுக்காத சுரங்கங்களில் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் நிலக்கரி எடுக்கப்படும் சுரங்கங்கள் குறித்து செப்டம்பர் 1ல் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது
மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதனால் அரசுக்கு 1.83 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் 155 நிலக்கரி சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் முந்தைய வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 63 சுரங்கங்களுக்கு அனுமதி தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.