சசிகலா பரோல் தாமதம் ஆவதற்கு காரணம் யார்?... கர்நாடக போலீஸ் தகவல்
சசிகலாவின் பரோல் தாமதம் ஆவதற்கு காரணம் சென்னை போலீஸார் தடையில்லா சான்றிதழ் வழங்காதது ஆகும் என்று கர்நாடக காவல் துறை தகவல் தெரிவித்தது.
பெங்களூர்: சசிகலாவின் பரோல் தாமதம் ஆவதற்கு காரணம் சென்னை போலீஸார் தடையில்லா சான்றிதழ் வழங்காதது என்று கர்நாடக போலீஸார் தெரிவித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உறவினர் மகாதேவன் கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் இறந்தார். அவரது மரணத்துக்கு சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை.
இந்நிலையில் அவரது கணவர் நடராஜனுக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடராஜனின் கல்லீரல், சிறுநீரகம் செயலிழந்துவிட்டது.
சசிகலாவுக்கு பரோல்
இதனால் அவரது நிலை மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனால் சசிகலா பரோலில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று தகவல்கள் கூறின.
சசியின் பரோல் மனு மறுப்பு
இந்நிலையில் சசிகலா பரோல் கேட்டு கடந்த 2 நாள்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். அந்த மனுவை ஆய்வு செய்த சிறை துறை அதிகாரிகள் அதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக தெரிவித்தனர். எனவே அவர் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பிக்குமாறு அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
மறுக்கிறது தமிழக அரசு
அவர் பரோலில் வெளியே வந்தால் அதிமுகவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு ஏதேனும் பங்கம் வந்துவிடும் என்று கருதி அவர் பரோலில் வெளியே வருவதற்கு தடங்கல்களை தமிழக அரசு ஏற்படுத்துவதாக தகவல்கள் கூறின. எனினும் இதை தமிழக அரசு மறுத்துள்ளது.
பரோல் தாமதமாக யார் காரணம்
இந்நிலையில் இதுகுறித்து கர்நாடக சிறைத் துறை கண்காணிப்பாளர் சோமசேகர் கூறுகையில், சசிகலா பரோலில் வெளியே வர தங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என சென்னை காவல் துறை தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழை சென்னை காவல் துறை இதுவரை வழங்கவில்லை. இதனால்தான் அவர் பரோலில் வெளியே வருவது தாமதமாகிறது. சென்னை காவல் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே சசிகலாவின் பரோல் மனு மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.