கனமழை குறித்து 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தோம்: மத்திய அரசு
டெல்லி: சென்னையின் பாதிப்புக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் பெருமளவு நீர் திறக்கப்பட்டு அடையாறில் வெள்ளம் ஏற்பட்டதும் காரணம் என கூறப்படுகிறது; சென்னையில் கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பெருமழை, பெருவெள்ளத்தால் சென்னையின் ஒரு பகுதி மூழ்கிப் போனது. வரலாறு காணாத பெருமழை குறித்து போதுமான முன்னெச்சரிக்கை விடுக்கப்படவில்லை; இது இயற்கைப் பேரிடரே என்கிறது தமிழக அரசு.
ஆனால் தொடர்ந்து முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில் தமிழக அரசுதான் போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டது; செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென அதிக அளவு நீர் திறக்கப்பட்டது; ஆகையால் இது செயற்கைப் பேரிடர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் ராஜ்யசபாவில் வறட்சி, இயற்கை பேரிடர் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது காங்.எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், சென்னையில் வெள்ள பாதிப்பின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக வெள்ள காலங்களில் விடுக்கப்படுகிற மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுங்கள் என்ற எச்சரிக்கையைக் கூட மாநில அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மையின் தோல்வியால் 400 உயிர்கள் பலியாகி உள்ளன. தற்போது ஏதோ ஆங்கிலேயர் ஆட்சி காலத்தைப் போல தவணை முறையில் நிதி உதவி வழங்குகிறது; இயற்கை பேரிடரை சமாளிக்க தமிழக அரசிடமும் எந்த ஒரு திட்டமுமே இல்லை என்றார்.
இதேபோல் சி.பி.எம். எம்.பி ரங்கராஜன், செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார். பின்னர் விவாதங்களுக்குப் பதிலளித்த மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:

அக்டோபர்- டிசம்பர் மாத காலம்தான் தமிழகம், புதுச்சேரிக்கு அதிக மழை கிடைக்கும். வழக்கமான மழை அளவை விட 115% கூடுதலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
சென்னை பேரழிவுக்கும் குளோபல் வார்மிங்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. குடியிருப்புகள் முறையான திட்டமிடலுடன் கட்டப்படவில்லை. இயற்கையான நீர்வழித் தடங்கள், ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டதும் சென்னை பாதிக்கப்பட ஒரு காரணம். சென்னையில் கனமழை பெய்யும்; அதனை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று 3 நாட்களுக்கு முன்பே தமிழக அரசை மத்திய அரசு எச்சரித்தது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் தமிழக அரசு உரிய முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை; செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு நீர் திறப்பால் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டுவிட்டது என்ற மத்திய அமைச்சர் ஜவடேகர் கருத்தால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications