நைட்ல வந்து ஏன் உயிர எடுக்குற? பெண் நோயாளியை தாக்கிய குடிகார மருத்துவர்.. சத்தீஸ்கரில் 'ஷாக்'
ராய்ப்பூர்: இரவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்ட பெண் நோயாளியை அரசு மருத்துவர் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இரவுப் பணியின் போது நன்றாக மது அருந்திவிட்டு, ரிலாக்சாக இருக்கும் போது அந்தப் பெண் நோயாளி அழைத்து வரப்பட்டதால் மருத்துவர் 'டென்ஷன்' ஆகி அடித்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

திடீர் நெஞ்சு வலி..
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பி மாவட்டத்தில் உள்ள கெர்வானி கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்மதி (50). சர்க்கரை நோயாளியான இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மகன் ஷ்யாம் குமார், ஆம்புலன்ஸுக்கு போன் செய்தார். ஆனால், யாரும் எடுக்கவில்லை. இதையடுத்து, ஆட்டோ பிடித்து தனது தாய் சுக்மதியை அவசர அவசரமாக கோர்பியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஷ்யாம் கொண்டு வந்துள்ளார்.

மருத்துவர்கள் யாரும் இல்லை..
அப்போது நீண்டநேரம் ஆகியும் மருத்துவர்களோ, செவிலியர்களோ சுக்மதிக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. இதனால் அவரது மகன் ஷ்யாம், அங்குள்ள அறைகளில் தூங்கிக் கொண்டிருந்த செவிலியர்களை எழுப்பியுள்ளார். பின்னர் செவிலியர்கள் அங்கு வந்து வேண்டா வெறுப்பாக சுக்மதிக்கு ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து கொண்டிருந்தனர். ஆனால், மருத்துவர் வரவில்லை. இதையடுத்து, மருத்துவரை அழைத்து வாருங்கள் என ஷ்யாம் குமார் சத்தம் போட்டுள்ளார்.

போதையில் சரமாரி அடி..
இதனைத் தொடர்ந்து, செவிலியர்கள், இரவுப் பணியில் இருந்த மருத்துவர் பிரகாஷை அழைத்து வந்தனர். நன்றாக மது அருந்திவிட்டு பணி நேரத்தில் உறக்கத்தில் இருந்த பிரகாஷ், டென்ஷனாக அங்கு வந்துள்ளார். அப்போது நோயாளியான சுக்மதியை எந்தக் காரணமும் இன்றி கன்னத்தில் அவர் பளார், பளார் என அறைந்துள்ளார். இதை பார்த்த அவரது மகன், இதை தடுக்க முயன்றார். ஆனால், விடாமல் சுக்மதியை மருத்துவர் அடித்துள்ளார்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி..
இந்நிலையில், அங்கிருந்த ஒருவர் இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த மருத்துவரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். விவகாரம் பூதாகரமானதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மருத்துவமனை டீன் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications