டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 37 இடங்கள் கிடைக்கலாம்... என்டிடிவி கணிப்பு!
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 37 இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி கணிப்பு கூறியுள்ளது. பாஜகவுக்கு 29 இடங்கள் கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு 4 இடங்கள் கிடைக்கும் என்றும் இந்தக் கணிப்பு கூறியுள்ளது.
கடந்த 2013ல் நடந்த தேர்தலை விட பாஜக கூட்டணிக்கு இந்த முறை 3 இடங்கள் குறைவாகக் கிடைக்கும் என்றும் இந்தக் கணிப்பு கூறுகிறது.
காங்கிரஸ் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது. 4 இடங்களே அக்கட்சிக்குக் கிடைக்குமாம்.

இந்துஸ்தான் டைம்ஸ், எக்கானமிக் டைம்ஸ், ஏபிபி நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் தனது கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. வருகிற சனிக்கிழமை டெல்லி சட்டசபைத் தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இதில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். பாஜக சார்பில் கிரண் பேடி களம் இறக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013 தேர்தலில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அக்கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஆனால் 49 நாட்களிலேயே அக்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. கெஜ்ரிவால் அதிரடியாக பதவி விலகியதால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. டெல்லி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் தனது முடிவுக்காக வருந்துவதாக தற்போது கெஜ்ரிவால் கூறி வருகிறார். அதேசமயம் டெல்லி மக்கள் இன்னும் கெஜ்ரிவால் மீது நம்பிக்கையுடன் உள்ளதை பல்வேறு கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன. இது பாஜக வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. மோடி அலைக்கு முடிவு கட்டுவார் கெஜ்ரிவால் என்ற பேச்சும் எழுந்து வருகிறது.
இதுவரை மோடி அலை என்று கூறி பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பாஜக வென்று வந்தது. ஆனால் டெல்லியில் இதற்கு ஆம் ஆத்மி பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என்று பலரும் கூறுகிறார்கள்.
கிரண் பேடியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தும் கூட அக்கட்சிக்கு பெரும் லாபம் கிடைக்காது என்றே பலரும் சொல்கிறார்கள். மேலும் பேடி வருகையால் டெல்லி பாஜக தலைவர்கள் பலரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். உள் குத்துகள் சகஜமாக நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல பாஜக தலைவர்கள் தேரத்ல் பணியில் அரை குறையாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அமீத் ஷா என்னதான் எச்சரித்தாலும் கூட இவர்கள் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை என்கிறார்கள்.
மொத்தத்தில் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி அமையும், கெஜ்ரிவால் முதல்வராகலாம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications