டிவி, மொபைல் பார்க்க கூடாதுனு கொடுமைப்படுத்துறாங்க.. பெற்றோர் மீது புகார் அளித்த பிள்ளைகள்
போபால்: மத்தியப்பிரதேசத்தில் டிவி, மொபைல் பார்க்கக் கூடாதென்று தடுத்ததாகக் கூறி பெற்றோர் மீது குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இவர்களது குடும்பத்தில் வேறு சில பிரச்னைகளும் இருந்ததால் குழந்தைகள் தங்களது அத்தை வீட்டில் வசித்து வந்ததாகவும், உணவு வழங்காமலும், அடித்து துன்புறுத்தியதாகவும், செல்போன், தொலைக்காட்சி பார்க்க தடை செய்ததாகவும் கூறி புகார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினர் மத்தியிலும் செல்போன் மற்றும் டிவியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தைக்குகூட யூடியூபில் தாலாட்டை போட்டுவிட்டு தொட்டில் ஆட்டுகின்றனர் சில பெற்றோர். ரீல்ஸ் பார்ப்பது, கேம் விளையாடுவது, தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் பார்ப்பது என தொடர்ந்து செல்போனிலேயே மூழ்கியுள்ளனர். சிலர் கழிவறையில் கூட செல்போனை பயன்படுத்துகின்றனர்.
செல்போன், மொபைலில் இருந்து குழந்தைகளை மீட்டெடுப்பதே பலரது வீட்டிலும் பெற்றோர்களின் பிரதான வேலையாக இருக்கிறது. இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் டிவி, செல்போன் பார்க்கவிடாமல் தடுத்ததாக பெற்றோர்கள் மீது குழந்தைகள் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த தம்பதிக்கு 21 வயதில் மகளும், 8 வயதில் மகனும் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்த குழந்தைகளை இவர்களது பெற்றோர் கொரோனா காலகட்டத்தில் இருந்தே மொபைல் போன் மற்றும் டிவி பார்க்கக் கூடாது என தொடர்ந்து தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 21 வயது சகோதரியும், 8 வயது மகனும் தங்களின் பெற்றோர் டிவி, மொபைல் பார்க்க விடாமல் தடுப்பதாகவும், தங்களை துன்புறுத்துவதாகவும், சாப்பாடு வழங்காமலும் கொடுமைப்படுத்தியதாக சாந்தன் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில், இவர்களது குடும்பத்தில் வேறு சில பிரச்னைகள் இருந்ததும், இதனால் அந்தக் குழந்தைகள் தங்களின் அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தைகளின் பெற்றோர் மீது காவல் துறையினர் பல்வேறு சட்டங்களின்கீழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, பெற்றோர் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குழந்தைகளின் தந்தை அஜய் சௌஹான் உயர்நீதிமன்றத்தில், தன் மீதும், தன் மனைவி மீதும் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications