லக்வி மீது நடவடிக்கை எடுக்க கோரும் இந்திய முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் சீனா!
மும்பை: மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லக்வியை விடுதலை செய்த பாகிஸ்தான் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சியை சீனா முடக்க முயற்சித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி கொடூர தாக்குதல்கள் நடத்தி 166 பேரை படுகொலை செய்தனர். இத் தாக்குதல்களை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வழிநடத்தியது லக்வி.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான லக்வி, மும்பை தாக்குதல் வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீதும், இவரது கூட்டாளிகள் 6 பேர் மீதும் இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், லக்விக்கு கடந்த டிசம்பர் மாதம் 18-ந் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்தியாவின் கடும் ஆட்சேபத்தால் அவர் தொடர்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பு சட்டப்பிரிவு 16-ன் கீழ் சிறையில் வைக்கப்பட்டார்.
ஆனால் அவர் அந்த சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டதை ரத்து செய்து லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் ஏப்ரல் மாதம் 10-ந் தேதி ராவல்பிண்டி அடியலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இது இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் லக்வி விடுதலையை கடுமையாகக் கண்டித்தன. இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையின்கீழ் இயங்கி வருகிற அல்கொய்தா தடை குழுவின் தலைவர் ஜிம் மெக்லேவுக்கு, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி எழுதிய கடிதத்தில், மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட லக்வியை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்தது ஐ.நா. தீவிரவாத தடுப்பு நடவடிக்கை குழுவின் தீர்மானம் 1267-ஐ மீறியது என்பதை சுட்டிக்காட்டி லக்வி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட மெக்லே, தங்களது அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என உறுதியளித்தார். அதன்படி, லக்வி விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் விளக்கம் அளிக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையின் அடிப்படையில் ஐ.நா.வின் தடைவிதிப்பு கமிட்டி கூடியது. ஆனால் சீனப் பிரதிநிதிகள், போதுமான ஆவணங்களை இந்தியா வழங்கவில்லை என்று கூறி இந்தியாவின் நடவடிக்கைக்கு தடையை ஏற்படுத்தி உள்ளனர்.
ஐ.நா.வின் தடைவிதிப்பு கமிட்டியில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளது. லக்வியின் விடுதலை தொடர்பாக கவலையை எழுப்பி உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் லக்வியை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.