குடைச்சலை தொடங்கியது சீனா! இந்திய வான்பகுதிக்குள் அத்துமீறி ஊடுருவியது சீன ஹெலிகாப்டர்கள்!!
டெல்லி: இந்தியாவுடன் நல்லுறவை கடைபிடிப்போம் என்று கூறிக் கொண்டே வழக்கம் போல இந்தியாவுக்குள் ஊடுருவல் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரதமராக மோடி பதவியேற்ற நிலையில் நல்லுறவை பேணுவோம் என்று சீனா உறுதி மொழி அளித்தது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரும் டெல்லி வந்து பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் 3வது நாளே உத்தர்காண்ட் மாநிலத்தில் இந்திய வான்பகுதியில் ஜூன் 12-ந் தேதியன்று சீன ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் ஊடுருவி பறந்திருக்கின்றன. அதாவது எல்லை கட்டுப்பாட்டைக் கோட்டை தாண்டி 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்திய பகுதிக்குள் ஊடுருவி அந்த ஹெலிகாப்டர் பறந்துள்ளது.
இந்தோ-திபெத் எல்லை போலீஸ் நிலை அருகே 10 நிமிடம் பறந்தும் இருக்கிறது. இப்படி உத்தர்காண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் வரை சீனாவின் ஹெலிகாப்டர் ஊடுருவி இருப்பது இந்திய ராணுவத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.
லோக்சபா தேர்தல் காலத்தின் போதும் இதேபோல் ஏப்ரல் 30-ந் தேதி ஒரு ஊடுருவல் நடவடிக்கையையும் சீனா மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்தியாவுக்கு அளித்து வரும் உறுதிமொழிகளை வழக்கம் போல காற்றில் பறக்கவிடப்பட்டு குடைச்சல் நடவடிக்கைகளை சீனா தொடங்கவிட்டதாக கருதப்படுகிறது.