சிக்கிம் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம்.. இந்திய பதுங்கு குழிகளை அழித்ததால் பதற்றம்
டெல்லி: சிக்கிம் மாநிலத்தின் சீன எல்லை பகுதியில் அத்துமீறி நுழைந்த அந்த நாட்டு ராணுவம் இந்திய ராணுவத்தின் இரு பதுங்கு குழிகளை தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
கடந்த பத்து நாட்களாகவே சிக்கிமின் தோகா லா ஜெனரல் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைய முயன்று வருகிறது. இந்திய ராணுவம், மனித சங்கிலி அமைத்து எல்லையை காத்து வருகிறது.
அப்படியும் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், எல்லையில் இந்திய ராணுவம் அமைத்திருந்த இரு பதுங்கு குழிகளை தாக்கி அழித்தனர். கடந்த 20ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும், கொடி ஆலோசனை நடத்தினர். ஆயினும் பதற்றம் தணியவில்லை.
இப்பகுதியில் இப்படி சீனா அத்துமீறுவது புதிது கிடையாது. 2008ம் ஆண்டு, இதே பகுதியில் இந்திய ராணுவ பதுங்கு குழிகளை சீன ராணுவம் தாக்கி அழித்தது. சமீபத்தில் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற இந்திய பக்தர்களை சீனா தடுத்து நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.