ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்
ஸ்ரீநகர்: இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதேபோல சீனா தரப்பில் சுமார் 43 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் வீரர்களைத் தொடர்ந்து குவித்து வருகின்றனர். இதனால் எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. நிலைமை சரி செய்ய இரு தரப்பிற்கும் இடையே நேற்று ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா!
சீனா ஊடுருவல்
இந்நிலையில், இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லை கிராமங்களில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் உர்கேன் செவாங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டிசம்பர் 10 மற்றும் 16ஆம் தேதிகளில் எடுக்கப்பட்டுள்ள இரண்டு வீடியோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேய்ச்சலுக்குச் சென்ற கிராமவாசிகள்
கடந்த டிசம்பர் மாதம் மேய்ச்சலுக்காக எல்லையில் அமைந்துள்ள பகுதிகளில் கிராமத்தினர் சென்றுள்ளனர். அப்போது சீன ராணுவத்தினர் இந்திய பகுதிகளுக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாக அவர் தெரிவித்தார். மேலும், உடனடியாக மேய்ச்சலுக்கு சென்றிருந்த கிராமத்தினரையும் அங்கிருந்து செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து இந்திய பாதுகாப்புப் படையினருக்கு கிராமவாசிகள் தகவல் அளித்துள்ளனர்.
நாங்கள் காவல் காத்தோம்
இது குறித்து அவர் கூறுகையில், "பாதுகாப்புப் படையினரின் எங்களை அங்கிருந்து நகர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். எனவே, அவர்களின் அறிவித்தலின்படி அதே இடத்தில் நாங்கள் சுமார் ஐந்து நாட்கள் இருந்தோம். சீன ராணுவம் மேலும் இந்தியப் பகுதிக்குள் வராத வகையில் நாங்கள் காவல் காத்தோம்" என்று அவர் தெரிவித்தார்.
விரட்டி அடித்தோம்
மேலும், "சில நாட்களுக்குப் பின், மீண்டும் டிசம்பர் 16ஆம் தேதி சீன ராணுவம் இந்தியா எல்லைக்குள் நுழைந்தனர். ஆனால், அப்போது இந்தோ திபத் காவல் படையினர் உள்ளிட்டோர் எல்லையில் எங்களுடன் தயாராக இருந்தனர். இந்தியாவுக்குள் நுழைய முயன்ற அவர்களை நாங்கள் விரட்டி அடித்தோம். வழக்கமாக, இந்த காலகட்டத்தில் இங்கு கடும் குளிர் நிலவும். இதனால் இச்சமயத்தில் யாரும் இங்கு வர மாட்டார்கள். அவர்கள் இந்தியாவின் சாலைகளையே பயன்படுத்தி நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்" என்றார்.