100 கொரோனா நோயாளிகள்.. 20 நிமிடங்கள் ஆக்சிஜன் கட்... காஷ்மீரில் நூலிழையில் உயிர் பிழைத்த நோயாளிகள்
ஸ்ரீநகர்: காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு சரியான நேரத்தில் சரி செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது.

டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் உயிரிழக்கும் அவலங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், ஸ்ரீநகரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு கடைசி நேரத்தில் சரி செய்யப்பட்டதால் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள ஜவஹர்லால் நேரு நினைவு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பெரும்பாலான நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடனேயே சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜன் திடீரென சுமார் 20 நிமிடங்கள் தடைப்பட்டது. இதனால் அங்குள்ள நோயாளிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக ஐசியு படுக்கைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்தது.
இருப்பினும், கடைசி நேரத்தில் இந்த கோளாறு சரி செய்யப்பட்டதால் நோயாளிகள் உயிர் பிழைத்தனர். சரியான நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டதாக தெரிவித்த மருத்துவமனை கொரோனா அதிகாரி டாக்டர் பில்கிஸ் ஷா , 20 நிமிடங்கள் வரை ஆக்சிஜன் தடைப்பட்டது என்றும் இந்த நேரம் அதிகமாகியிருந்தால் பேரழிவு நிகழ்ந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications