கூட்டுறவுத் துறைக்கு பெரும் பாதிப்பு.. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு கேரள அரசு எதிர்ப்பு
திருவனந்தபுரம்: ரூ.500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு, கூட்டுறவுத்துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதாரத்தை மந்தப்படுத்திவிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
கேரள சட்டசபையில் இன்று இதுகுறித்து பேசிய தாமஸ் ஐசக், மத்திய அரசின் நடவடிக்கையால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், மாநில கருவூலத்துறைக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனவும் ஆதங்கம் வெளிப்படுத்தினார்.
கருப்பு பணத்தை ஒழிப்பதில் கேரள அரசுக்கும் அக்கறையுள்ளது, அதே நேரம், மத்திய அரசு நடந்து கொண்ட விதம் ஏற்புடையது இல்லை. சாமானிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல், ஒழுங்கான முறையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
டிசம்பர் 30ம் தேதிவரை பணத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் பண புழக்கம் குறைந்து, நாட்டில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், கேரள அரசு வரும் 11, 12 மற்றும் 13ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த லாட்டரி குலுக்கலை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்து.
கேரள மாநில நிதி என்டர்பிரைசஸ் நடத்தும் சிட்பண்ட் ஏலமும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் கூட்டுறவுத்துறைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் மக்கள் பீதியடைய வேண்டாம். உங்கள் பணம் உங்களிடமே திரும்பி வரும். கேரள அரசு தேவையான அனைத்து வசதிகளையும் மக்களுக்கு செய்து தர தயாராக உள்ளது. இவ்வாறு தாமஸ் ஐசக் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.